Translate

Saturday, 21 September 2019

கண்கள் பார்த்து உன்னை கவிதை

கண்கள் பார்த்து உன்னை
எந்தன் காதல் சொல்ல வேண்டும்!
காலம் யாவும் கரங்கள்
கோர்த்து நடந்திட வேண்டும்!

கால்கள் நனையும் வரையில்
கடல் நுரைகள் மோதிட வேண்டும்!
காற்றும் களையும் வரையில்
மடி கிடந்து சிரித்திட வேண்டும்!

பகலும் கரையும் நேரம்
பசும் புல்வெளி கிடந்திட வேண்டும்!
இரவுகள் இருக்கும் வரையும்
பேசி மகிழ்ந்திட வேண்டும்!

இளமை தீரும் வரையும்
இறுக்கம் இருந்திட வேண்டும்!
இன்னும் நீளும் நேரம்
இன்ப நினைவுகள் சேர்ந்திட வேண்டும்!

முதுமை வந்த பின்னும்
முத்தங்கள் முளைத்திட வேண்டும்!
தோல்கள் சுருங்கிய போதும்
இதயம் இணைந்திட வேண்டும்!

நடுக்கம் வந்த பின்னும்
உன்னோடு நடை பயின்றிட வேண்டும்!
பொக்கை விழுந்த போதும்
நாம் காதல் பேசிட வேண்டும்!

கண்கள் மூடும் நேரம்
நாம் இல்லாது போகிட வேண்டும்!
இந்த வாழ்வே
நீயும் நானும் என்றாகிட வேண்டும்!

#கனவு

No comments:

Post a Comment