முகிலா...
உன் தூரிகை தீட்டிய
காரிகையின் கற்பழிப்பை
நான் சுமந்து காட்சிப்பட்டேன்!
கருவறைக்குள்
காமத்திரை திறந்திட்ட
அந்தணன் செய்யா-துவேஷம்
நீ செய்தாயாமே!?
ஓ!
தேசபக்தர்கள் கூடிவிட்டனரா...?
ஆசிபாவின் அந்தரங்கம்
ஆலயத்திற்குள் சிதைக்கப்பட்டதை
அறியவில்லையோ-அவர்கள்!
அன்னையாக அவதானிக்க
மூன்றுநாள் குருதிக்கொடை
இயற்கை என்றான பெண்டிர்
சபரிமலை சாமி தரிசனம்
செய்தலாகாதாமே
சொல்லியது அவாதானே!?
காவி நாடென்று பாவி நாமென்று
நிலங்கள் பிடுங்கப்படுவதை...
டாலர் தேசத்து நிலையென்றே
விலைகள் ஏறிச்செல்வதை...
நாடுநாடாய் ஏழைத்தாய் மகன்
விமானம் பறந்து செல்வதை...
மாட்டுக்கறியுண்டாய் என மாந்தர்
ஆட்படும் மரணவதை...
யாவும் கூறினாயாமே முகிலா!?
பாண்டேக்கள்...
ஊளையிடும் மனுதர்மத்தை
பக்தாள்கள் சிதைத்தெறியும்
மதங்களின் சமதர்மத்தை...
நித்தமும்...நிர்வாணப்படும்
நீதி தர்மத்தை...
அக்கிரமம் என்றா சொன்னாய்-முகிலா!?
துப்பாக்கிகள் துழைத்தெறியும்
கவுரி லங்கேஷ் கழு(ரு)த்து ரத்தத்தை
காவி டவுசர் என்றே
வரைந்தே வைத்தாயாமே முகிலா!?
நன்நூல்கள் வழி தந்த
ஆட்சி இல்லை
இது முந்நூல் செய்யும்
வலி தந்த ஆட்சியென்றே
அறியாதவனா முகிலா!?
தூரிகை...ஏந்திவிட்டாய்...
புயலொன்று ஏவிவிட்டாய்...
ஓவியம் நான் பிறந்துவிட்டேன்!
சங்கிகள் கதருவது கேள் முகிலா!
இவை சதியென்றே
ஓங்கி நீ சொல் முகிலா!
#இளையபாரதி
No comments:
Post a Comment