Translate

Friday, 11 January 2019

புது காதல் மனதில்...பூவிதழாய் அவள்!

பன்னீர்த்துளி ஒன்று
ரோஜா இதழ் விட்டு
சேலை கட்டி வந்துவிட்டதோ!
பூ வாசம் தோற்றுப்போகிறது
அவளின் பெண்வாசத்தால்!

வீதியெங்கும் விரவி நிற்கும்
மகிழ் கடலின் புகழ் சேர்க்கிறாள்
பச்சை மலை தோன்றிய
நதியாய் நடை நடந்தே!

கண்கள் மூடியும்
அழகின் காட்சியாகிறாள்!
அருகம்புல் மீதமர்ந்த பனித்துளியாய்
கதிரவன் ஒளியை பிரதி எடுக்கிறாள்!

அந்த மாலைப்பொழுதில்
சிவந்த வானம்
நிரப்பி வைத்த செவ்வொளியில்
மஞ்சள் நிலவாய்
தனித்து தெரிகிறாள்!

இதழ் சிந்தும் புன்னகையால்
இதயம் எங்கும் சிதிலம் செய்தே
மனதின் தடையை
மண்பானையாய் உடைத்து எறிகிறாள்!

மங்களப்பூக்கள் சிதற
காதல் கோட்டையின்
திறப்புவிழா செய்கிறாள்!

இப்பொழுதெல்லாம்
அழைப்பிதழ் இன்றியும்
அமர்ந்து கொள்கிறாள்
இதய சிம்மாசனத்தில் - அவள்
அழைப்பிதழ் இன்றியும்
அமர்ந்து கொள்கிறாள்!

#புரியாமலே_நான்!

No comments:

Post a Comment