நாட்டியக்காரி!
ஆடல் கலை வித்தகி
மேடை விளக்குகள்
வண்ணமாய் மின்னும் போதும்
தனித்த பெருவொளியாய்
அரங்கம் நிறைபவள்!
ஆட்டச் சிறப்பினும்
ஆடை குறைப்பையே கேட்கும்
சமூகத்தின் கண்களுக்கு
மார்பில் கொஞ்சமும்
இடையில் கொஞ்சமும்
உடையணிந்தே உற்சாகம் தருபவள்!
இளமை தீயில்
கற்பை அழிக்காது இருப்பவள்!
ஆனாலும்....
ஓர் இரவுக்கு அவளிடம்
விலை கேட்டே நகர்ந்தனர்- மாந்தர்!
சோகப்புன்னகையை
வேகமாய் காட்டிவிட்டு
விலகி செல்பவள்!
விடியா இரவுகளில் குடும்பத்தின்
விளக்காய் இருப்பவள்!
அணைக்கத்துடிக்கும்
ஆடவர் கூட்டம் அரங்கம் நிறைகிறது!
கலையின் சிலை அவள்
அங்கத்தின் துள்ளலில்
இளமை நிறைகிறது!
இன்னமும் அவள் பத்தினி
என்பதை ஏற்க மறுக்கிறது!
நாட்டியக்காரிதானே...
இல்லாமலா இருக்கும்-எனும்
ஏளன வார்த்தைகள் அவள்
இதயம் கிழிக்கிறது!
#இளையபாரதி
No comments:
Post a Comment