Translate

Monday, 28 January 2019

ஒரு ஓவியம் பேசுகிறது! கவிதை



முகிலா...
உன் தூரிகை தீட்டிய
காரிகையின் கற்பழிப்பை
நான் சுமந்து காட்சிப்பட்டேன்!

கருவறைக்குள்
காமத்திரை திறந்திட்ட
அந்தணன் செய்யா-துவேஷம்
நீ செய்தாயாமே!?

ஓ!
தேசபக்தர்கள் கூடிவிட்டனரா...?
ஆசிபாவின் அந்தரங்கம்
ஆலயத்திற்குள் சிதைக்கப்பட்டதை
அறியவில்லையோ-அவர்கள்!

அன்னையாக அவதானிக்க
மூன்றுநாள் குருதிக்கொடை
இயற்கை என்றான பெண்டிர்
சபரிமலை சாமி தரிசனம்
செய்தலாகாதாமே
சொல்லியது அவாதானே!?

காவி நாடென்று பாவி நாமென்று
நிலங்கள் பிடுங்கப்படுவதை...
டாலர் தேசத்து நிலையென்றே
விலைகள் ஏறிச்செல்வதை...
நாடுநாடாய் ஏழைத்தாய் மகன்
விமானம் பறந்து செல்வதை...
மாட்டுக்கறியுண்டாய் என மாந்தர்
ஆட்படும் மரணவதை...
யாவும் கூறினாயாமே முகிலா!?

பாண்டேக்கள்...
ஊளையிடும் மனுதர்மத்தை
பக்தாள்கள் சிதைத்தெறியும்
மதங்களின் சமதர்மத்தை...
நித்தமும்...நிர்வாணப்படும்
நீதி தர்மத்தை...
அக்கிரமம் என்றா சொன்னாய்-முகிலா!?

துப்பாக்கிகள் துழைத்தெறியும்
கவுரி லங்கேஷ் கழு(ரு)த்து ரத்தத்தை
காவி டவுசர் என்றே
வரைந்தே வைத்தாயாமே முகிலா!?

நன்நூல்கள் வழி தந்த
ஆட்சி இல்லை
இது முந்நூல் செய்யும்
வலி தந்த ஆட்சியென்றே
அறியாதவனா முகிலா!?

தூரிகை...ஏந்திவிட்டாய்...
புயலொன்று ஏவிவிட்டாய்...
ஓவியம் நான் பிறந்துவிட்டேன்!
சங்கிகள் கதருவது கேள் முகிலா!
இவை சதியென்றே
ஓங்கி நீ சொல் முகிலா!

#இளையபாரதி

Monday, 21 January 2019

தைப்பூசம்..மார்க்கம்பட்டியில்!

தைப்பூசமும்... இழந்தைப்பழங்களும்!

எம்பெருமான் முருகனுக்கு பக்தர்கள் மார்கழியில் மாலையணிந்து காலையும், மாலையும் இறைவழிபாடுகள் செய்வர். மைக்செட் குழாய்கள் இறைகானம் பாடும். வருடம் முழுவதும் அமைதியாகவே நகரும் என் கிராமத்தின் பொழுதுகள்...இந்த பக்தி பாடல்களால் ஒரு ஆரவாரத்தை நம்முள்ளே கடத்திவிடும்.

வெள்ளியும், செவ்வாயும் பொங்கச்சோறும், சுண்டலும் கிடைக்கப்பெறும் பொன்னாள் ஆக மாறிவிடும். அதிகாலை தொட்டே முருகன் கோவில் விழாக்கோலம் பூண்டுவிடும். நாங்களும் அங்கேயே சுழன்று கொண்டிருப்போம்.

எத்தனை பொங்கல் வைப்பார்கள்...?
என்னவெல்லாம் இன்று கிடைக்கும்
என்றே ஒரு ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.
இரவு நேர பஜனைகள் சற்று நீண்டு செல்லும். நாங்கள் காத்திருந்தாலும்...தூக்கம் காத்திறாது வந்துவிடும். அரைத்தூக்கத்திலும் ஆசையோடு பொங்கலும் சுண்டலும் வாங்கிவிட்டே வீடு செல்வோம்.

தைப்பூசம்...அன்றைய நாட்களில்
ஒரு உற்சாக திருவிழாதான்.
அன்னதானத்திற்காக  முதல் நாளே தேக்கமரத்து இலைகள் பறிக்க...ஏதோ வேட்டைக்கு செல்வதாய் செல்வர் இளைஞர் கூட்டம். நாங்களெல்லாம் சிறுவராய் இருப்பதால் அவ்வளவு எளிதாக அழைத்து செல்லமாட்டார்கள்.

எப்போது... தேக்க இலை பறிக்க அழைத்து செல்லப்படுகிறோமோ அப்போது நமக்குள் ஒரு தனி கெத்துதான். முசுறுகள்(செவ்வெறும்பு) அரண் செய்திருக்கும் தோட்டத்தில்...வேட்டைக்காரன் என நுழைந்து இலைகளை பறித்து குவிக்க வேண்டும். யார் அதிகம் பறிக்கிறார்கள் எனும் போட்டி எமக்குள்.

இதனிடையே...தேக்கந்தோப்பில் வளர்ந்திருக்கும் இழந்தை மரங்களில் பச்சையாகவும், அரைச்சிவப்பாகவும் பழங்கள் இருக்கும். பெரிய பையன்களை மீறி, இழந்தை முற்களைத்தாண்டி நமக்கானவற்றை பறிப்பதென்பது ஒரு சுவாரசிய போர்தான்.

பின்னர்...மாலையில் தேர் கட்டிவரும் ட்ராக்டரை கழுவ அம்பாள் கோவில் குளம் செல்வர். அந்த ட்ராக்டரில் இடம் பிடித்து செல்வது மீண்டும் ஒரு ஆனந்த போராட்டம் ஆகிவிடும். குளத்தில் தொப்பென்று குதித்து, ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை இறைத்து அடிக்கும் கூத்து தந்த மகிழ்வை இன்றைக்கு கோடி ரூபாய்களால் கூட தர முடியாது.
இன்றைய சிறுவர்களும் பெறமுடியாது அந்த பேரானந்தத்தை!

இரவில்...அன்னதானத்திற்கு சமைப்பர்.
அதற்காக காலையில் இருந்தே...அரிசியோ...புளியோ... காணிக்கையோ..கொண்டுவந்து தர சொல்லி மைக்கில் கூறுவர். அதில் நாமும் ஒரு முறை சொல்லிவிட ஆசை துடிக்கும்.அப்பப்போ நடந்தும் விடும்.

மாலையில் நாங்களெல்லாம் தண்ணீர் தூக்கி, சிறு சிறு வேலைகள் செய்து கோவிலே குற்றாலம் என துள்ளிக்குதித்து ஆட்டம் போடுவோம்.
நள்ளிரவில்..கருப்பட்டியும்..சுக்கும்..மல்லியும் சுண்டந்காய்ந்த தேனீர் வரும் பாருங்கள்.!  அதன் மணம் இப்போதும் நாசியில் நர்த்தனம் ஆடுகிறது.

மறுநாள்...
தைப்பூசதிருநாள்!
சுற்றுப்பக்க உறவுகள் எல்லாம் குவிந்து இருக்கும் கோலாகல திருநாள்! பக்தி பாடல்களால் பஜனை நீண்டு கொண்டே செல்லும். கூட்டம் மூன்று வீதிகளிலும் முண்டியடித்துக் கொண்டிருக்கும்!
இங்கும் அங்கும் கால்கள் பரபரக்கும்!

"ஏய்..எப்பா... இந்த பக்கம் சோத்தை கொண்டுவாயா..அங்க பாரு இன்னும் இலையே கொடுக்காம இருக்கு. ஏ..சாமி.. சீக்கிரம் சாப்பாட்டை அள்ளிபோடுய்யா..."இப்படியாக மைக்கில் குரல்கள் ஒலிக்க...கை நிறைய அன்னமும், மனம் நிறைய பக்தியும், ஊர் நிறைய மகிழ்வும் குவிந்திருக்க
ஆனந்தமாய் அன்னதானம் நடந்தேறும்.

அந்த நாட்களை கொண்டுவருமா
இன்றைய நாட்களின் தைப்பூசம்!
ஏக்கத்துடன்..என்னைப்போன்றே பலர்...என் கிராமம் விட்டு வெளி ஊர்களில்!

#தைப்பூச_வாழ்த்துக்கள்!

Sunday, 20 January 2019

கதையும்...காதலும்...ஒரு பாடல்!

தோல்விகள்...
எப்போதும் எல்லோரையும்
மொத்தமாய் சாய்த்து விடுவதில்லை.
ஏனெனில்...கல்லூரி நாட்களில் போலியான பட்டாம்பூச்சிகள் பறந்தடிக்கும் இதயத்தோட்டத்தில்
காதல் மலர் ஒன்று மொட்டுவிட்ட தருணம். அதன் அழகை...வாசம் குறையாமல் அவளிடம் தந்துவிட எண்ணினேன்.

அதுவரை எனக்கு நானே அறிந்துகொண்டதில்லை...அவள் என் நினைவுகளில் வந்துபோவதை. அந்த நினைவுகள் என் மனதில் மாநாடு நடத்த அனுமதி கேட்டுவந்த வேளையில்...அவளுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.

பெண்ணவளே...காதல் பூக்கள் உன்னிடத்தில் தஞ்சம் கேட்கின்றன. நெஞ்சம் தருவாயா... நானும் உடன் வந்து தங்குவதற்கு என்றே அனுப்பி வைத்தது
அனுமதி கடிதம்தான்.

அதற்கே...
நான் தேசதுரோகம் செய்ததாக விசாரணை இன்றி மரணதண்டனை தந்துவிட்டாள் என் நட்பிற்கு.என்
முகம் பார்த்திடவில்லை. என் விளக்கங்களுக்கு செவிமடுத்திடவில்லை. இடையே வந்து தொலைத்த என் பிறந்தநாளின் இனிப்பையும் எடுத்து ருசித்திடவில்லை.

மொத்தமாய்...தீ மூட்டிவிட்டாள்
அத்தனை நாள் நட்பிற்கும். வெட்கத்தோடு வேதனையும் வாட்ட...
கோபமாய் கிறுக்கி எறிந்தேன் கவிதை ஒன்றே. ஆயினும் மனம் தேறவில்லை.

அந்த தோல்வி துவட்டி எடுத்த வலிகளில் வந்து சேர்ந்தது இந்த பாடல் வரிகள் தான். அதுவரை கவிதையாகவே எழுதிப்பழகியவன் இசையின் வடிவினுக்கு "அணி" தர பாடல் எழுதிப்பழகலானேன்.

ஒரு தோல்வியும்...அது தந்த சோகமும்
வேறொரு சுகமாய் என்னோடு பயணிக்கிறது இன்றுவரை பல்வேறு பாடல் வரிகளாக. ஆனால் அவையும் என்போன்றே தனித்து இருக்கின்றன இசையின் கூடல் இன்றி.

எமது முதல் பாடல்வரிகள்...
மொத்த காதலையும் சுமந்து நிற்கும் தருணம்...

#Soup_Song

பாதகத்தி
பாவி நெஞ்ச கொன்னுபுட்டாடா
உசுர கையில் எடுத்து வச்சு தின்னுபுட்டாடா 
நட்பாக இருந்த நெஞ்சு
காதலா மாறிப்போக
நட்பும் தண்ணீரில் தள்ளாடுது !
மனம் கண்ணீரில் அள்ளாடுது !

நேத்து வர இருந்த நட்பு
இன்னைக்குத்தான் செத்துபோச்சு
என்னோட இருந்த நாள
நாளைக்கு இல்லாம செஞ்சு புதைச்சுப்புட்டாடா
அவ புதைச்சுப்புட்டாடா!

பூவாக இருந்த நெஞ்சு
தீயாத்தான் மாறிப்போச்சு
யாரு இங்கு
அத வந்து எட்டிப்பாத்தது
கையில் தொட்டுப்பாத்தது  !

தெருவில் வீசிப்போன இதயம்
துடிச்சு நிக்குது
அத காலில் எட்டி உதச்சுப்புட்டு
தள்ளிப்போகுது
அவ நெஞ்சு போகுது ...
மனம் பிஞ்சு போகுது!

ஏனோ தெரியவில்லை
ஏ நேரம் சரியும் இல்ல
காயம் இன்னும் ஆரவில்லை-
உள் மனசுல
எந்தன் முள் மனசுல!

என் நெஞ்சு இளவம் பஞ்சு
நீ அள்ளி வச்சு கொஞ்சு
மாட்டேன்னு தள்ளிப்போகாத
ஏ உசுர கிள்ளிப்போகாத
உன்ன  நான் மறக்கவில்லை
மறக்கவும் போறதில்லை
ஏ உசுர கொளுத்திப்போகாத!



Saturday, 19 January 2019

நாட்டியக்காரி கவிதை


நாட்டியக்காரி!


ஆடல் கலை வித்தகி
மேடை விளக்குகள் 
வண்ணமாய் மின்னும் போதும் 
தனித்த பெருவொளியாய்
அரங்கம் நிறைபவள்!

ஆட்டச் சிறப்பினும்
ஆடை குறைப்பையே கேட்கும்
சமூகத்தின் கண்களுக்கு
மார்பில் கொஞ்சமும்
இடையில் கொஞ்சமும்
உடையணிந்தே உற்சாகம் தருபவள்!

இளமை தீயில்
கற்பை அழிக்காது இருப்பவள்!
ஆனாலும்....
ஓர் இரவுக்கு அவளிடம்
விலை கேட்டே நகர்ந்தனர்- மாந்தர்!

சோகப்புன்னகையை
வேகமாய் காட்டிவிட்டு
விலகி செல்பவள்!
விடியா இரவுகளில் குடும்பத்தின்
விளக்காய் இருப்பவள்!

அணைக்கத்துடிக்கும்
ஆடவர் கூட்டம் அரங்கம் நிறைகிறது!
கலையின் சிலை அவள்
அங்கத்தின் துள்ளலில்
இளமை நிறைகிறது!

இன்னமும் அவள் பத்தினி
என்பதை ஏற்க மறுக்கிறது!
நாட்டியக்காரிதானே...
இல்லாமலா இருக்கும்-எனும்
ஏளன வார்த்தைகள் அவள்
இதயம் கிழிக்கிறது!

#இளையபாரதி

நீ தொட்டுப்பின்னிடும் - காதலி!

காதலி...!

நீ தொட்டுப்பின்னிடும்
கருஎழில் கூந்தல் அமர
காத்திருக்கும் மல்லியும் ரோஜாவும்
இட நெரிசலில் சிக்குற
நீ கூந்தல் உதற
சிதறிய துளி ஒன்று
வெயில் காய்ந்து வெள்ளை முத்தாய்
உன் கழுத்துப் பாசியாக காத்திருக்கிறது!

தொட்டுத்தடவி மீதிவிட்ட மஞ்சள்
உன் முகம் சேரா சோகத்தில்
மூர்ச்சையாகிப்போக...
உன் மேனி பட்டு வழிந்த நீரால்
மீள்உயிர் பெற்றதடிப் பெண்ணே!

பால்கடலில் திணை குழைத்து
செய்ததான உன்மேனி
குளிக்கும் காட்சி கண்டு
குளியல் அறைச்சுவரும்
காதல்ப்பிணி கொண்டதடி!

உன் மார்பமர்ந்தே ஈரம்பட்ட
பட்டாடையும் அதுவெயில்காயும் கயிறும்
புனிதமாகிப் போனது அறிவாயா!

பொன்னெடுத்து மடித்த சேலைகட்டி
நெற்றிப்பொட்டிடும் நேரத்தில்
உன் பெண்மை வாசம்
நாசி துளைக்குதடி!
நரம்பு சிரலிற்குதடி!

கால்கொலுசின் இசையொலி
கர்நாடக சங்கீத சபைஏறி
இசைத்தென்றல் வீசும் நேரம்
இதயவாசல் உன் வருகை பார்க்குதடி!

கவிவித்தை காட்டும்
எழுத்துக்கள் எல்லாம்
நம் காதல் பாடுதடி!
நறுமுகையே யாழிசையே
என் முத்தம் ஏற்றுக்கொள்ளடி!

#இளையபாரதி

Thursday, 17 January 2019

தமிழென்ற மொழியாம்- கவிதை

தமிழென்ற மொழியாம்
அமுதென்ற சுவையாம்
உழவென்ற தொழிலாம்
உயிரென்ற உறவாம்
எங்கள் நிலத்தே
பகலவன் ஏற்றிய
பசுமை ஒளியில்
உயிரினங்காள்
நன்றி நவிழும்
நல்லதோர் இனத்தின்
இணையற்ற பெருவிழா
"பொங்கல்" திருநாள்
கொண்டாட்டங்கள்
அலுவலகத்தில்!

வாழ்த்துக்களுடன்
#இளையபாரதி!

ஹரியின் குழந்தைத்தனம்! கவிதை

குழந்தைத்தனம்!

அவன் கல்யாண வயதைத்தொட்டுவிட்ட சமூக விலங்கு. எழுத்துக்களோடே உறவாடும் இணையவாசி. இன்னும் யாதொரு காதலும் கொண்டிராத போலிக் காதலன். மழலையினின்று மாறி வந்துவிட்டாலும் குழந்தைத்தனம் குறையாத குரங்கு பொம்மை. அன்பை விதைக்கவும், எடுக்கவும் தெரிந்த உயிர் நேசன்.

அதிகாலை விழிக்கும் போதெல்லாம் அம்மாவை அருகே அழைத்துக்கொள்வான். ஒற்றை முத்தத்தை கொடுத்துவிட்டு...பத்து முத்தம் வேண்டுமனென கேட்கும் கந்துவட்டிக்காரன். கட்டி அணைத்து சில நிமிடம் தூங்கக்கேட்கும் பிடிவாதன்.

கண்கள் திறந்ததும் கண் சிமிட்டியே காஃபி கேட்கும் தூங்கமூஞ்சி...! அன்னை அவள் சமையலறையில்...சமைக்கும் போதெல்லாம்...முதுகை கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கும் இடைஞ்சல்காரன்.

தொலைக்காட்சி பாட்டு இசைக்கும்போதெல்லாம் ...சேர்ந்து ஆடிட அழைக்கும் தொல்லைக்காரன்.
தோள் சாய்ந்தே பேசி மகிழும் மழலைக்காரன்.

உண்ணும் போதெல்லாம் ஊட்டிவிட கேட்கும் செல்லப்பிள்ளை...
அன்னைக்கும் அன்னம் ஊட்டிவிடும்
மழலைத்தாய் அவன்.

நேற்று பிறந்த மகவென
மறுக்காமல் கட்டியனைத்தே
தாலாட்டு கேட்கும் சிறுபிள்ளை!

தட்டிக்கொடுத்தே சிரிக்கும்
அன்னையின் அரவணைப்பில்
தூங்கிப்பழகிய வாலிப_குழந்தை அவன்!

எத்தனை வயது ஆனாலும்
அன்னைக்கு குழந்தைத்தனம் மாறா
பிள்ளை தானே நாமெல்லாம்!

#அன்னையும்_நானும்!
#இளையபாரதி

களனியோடு விளையாடா கவிதை

களனியோடு விளையாடா
காளையர் கூட்டம்
கணினியோடு உறவாடும்
Computer உலகமிது!

ஆயினும் அன்னைத்தமிழ் நிலத்தே
உழைத்துக்களைத்தவன் வியர்த்துளிகள்
பொன்னினும் பெரிதாய் புகழ் சேர்க்க
ஆதவன் பெருவொளியால்
தீதின்றி வளர்ந்த நற்கதிரின்
அறுவடைத் திருநாளாம்
தைத்திங்கள் பொங்கல் பெருநாள்
உலகத்து தமிழர் திருநாள்!

தீங்குகள் சூழ்ந்தாலும்
நிமிர்ந்தெழுந்தே நின்று வென்ற
ஜல்லிக்கட்டுப் பெரும்புரட்சி
காளைகள் களம் நிறம்பட்டும்!

நிமிர்ந்த கரும்பின் சுவை
உள்ளம் நிறையட்டும்!
சுவை கூட்டும் வெல்லமும்
பாலும் பச்சரிசியும்
நெய்யும் முந்திரியும்
செம்பானையத்தே பொங்கி
இல்லமும் உள்ளமும்
மகிழ் நிறையட்டும்!

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும்
அன்னைத்தமிழ் செம்மொழியில்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

#இளையபாரதி

கருத்த உடம்புக்காரி - கிராமிய பாடல்!

கிராமிய பாடல்!

கருத்த உடம்புக்காரி
கண்டாங்கி சேலைக்காரி
ஒய்யார கொண்டை போட்டு
களத்து மேட்டுப்பக்கம்
கஞ்சி கொண்டு வார புள்ள

வார சந்தையில
வலையலு வாங்கிருக்கேன்!
தேனி சந்தையில
தோடு ஒன்னு வாங்கிருக்கேன்!

சீமை போயி நானும்
சிலுக்கு துணி வாங்கிருக்கேன்!
சின்ன இடுப்புக்குத்தான்
ஒட்டியாணம் வாங்கிருக்கேன்!

மாமன் மனசுக்குள்ள
மாடி கட்டி வாழும் புள்ள
தையும் பொறந்திரிச்சு
பொங்கல் வந்திருச்சு

சல்லிக்கட்டில் மாமன்
காளை புடிக்க போறேன் புள்ள!
பொண்ணு பொருளையெல்லாம்-பரிசா அள்ளிக்கிட்டு வாரேன்புள்ள!

ஊரு சனமெல்லாம்
ஒன்னா இங்க கூடி நின்னு
பொங்கல் பொங்கிடனும்
இன்பம் நெறைஞ்சிடனும்
என்று சொல்லி நாம
சாமியத்தான் கும்பிடலாம்!

தீதொழித்து எழும் சூரியனே கவிதை

தீதொழித்து எழும் சூரியனே
உமை போற்றுகிறோம்!
வாழ்வளித்து மகிழும் தமிழ் மண்ணே
உமை போற்றுகிறோம்!

நிமிர்ந்தெழுந்து வளர்ந்த
செங்கரும்பே
பச்சைப்படலம் விரித்த நெற்கதிரே
நிலத்தே விளைந்த
பொன்பொருளே
உழைப்பில் உறுதுணையான
கோ இனமே
உமை போற்றுகிறோம்!

வானே.. மழையே...
வாழ்வளித்த மண்ணே...
நன்றி கொண்டே நாங்கள்
நற்பொங்கல் திருநாளில்
இறையென உம்மை போற்றுகிறோம்!
எந்நாளும் எம்மை காத்தருள்வாய்!

இல்லமும் உள்ளமும்
பெருமகிழ் பொங்க
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

#இளையபாரதி

ஒற்றைத் துணியில்-காந்தியடிகள் கவிதை

ஒற்றை துணியில்
நாட்டின் மானம் காத்து நின்றவர்!
எரியும் தீயின் நடுவே
அகிம்சை மெழுகை பார்த்துக்கொண்டவர்!
ஆயுதங்கள் உரசும் சண்டையில்
அன்பை பேசி தனித்து நின்றவர்!

போர்கள் ஓய்ந்து போகும்-சிந்தும்
ரத்தம் காய்ந்து போகும்
அன்பு மட்டும்
உயிரின் ஆழம் பாய்ந்து
நாளும் வாழும் எனும்
தத்துவத்தில் வாழ்வை
அமைத்து தேசத்தந்தை ஆனவர்!

பொய்மை மறுத்து
மெய்யியலில் ஆட்சி செய்தவர்!
உலகப்பந்தில் இந்தியத்தின் சுதந்திரத்தை
வென்று வைத்தவர்!

எந்த நாளும் நம்மில்
புகழால் மறையாது
வாழ்ந்து கொண்டிருப்பவர்...!

அன்னை தேசத்து தந்தையானவர்
அனைவருக்கும்ம் தாத்தா
எனும் உறவு தந்தவர்
காந்தியடிகள்!

பெருமையும் பெருமைப்படும்
அருமையானவர்-
அண்ணல் காந்தியடிகள்!

திமிலு முழுக்க திமிரு இருக்க - கவிதை

திமிலு முழுக்க திமிரு இருக்க
சீறி வாடா சிங்ககுட்டியே!
கொம்பு சீவி அங்கம் சிலிர்க்க
பாய்ஞ்சு வாடா பாலமேட்டுல!

அடங்காத ஊரு ஆளுக யாரு
அலங்காநல்லூர் பேர கேளு
பீட்டா கூட்டத்துக்கு அல்லு விட்டுரும்
ஜல்லிக்கட்டு புரட்சி வெடிச்ச
மண்ணு இதுதான் வணங்கி நிப்போமே!

மெரினா அதிர...உலகம் உதர
கூடி நின்னோம் கோடி சனங்க
கேடிப்பயல்லாம் ஆடி அடங்க
வேட்டை யாடுனோம்!

கோட்டை சுவரில் அதிர்வு கிளம்ப
வீர முழக்கம் எழுப்பிக் காட்டினோம்
இது மண்ணோட பெருமை
முன்னோர் தந்த அருமை ஜல்லிக்கட்டுதான்!
நாங்க விடமாட்டோம்தான்!

எங்கெங்கோ தமிழன் இருந்தாலும்
எல்லாரும் ஒன்னுன்னு கூடி நின்னோமே!
வீரம் தான் பொறப்புன்னு
பொளந்து கட்டினோமே!

வாடா ஜல்லிக்கட்டு வீரா...
களத்துல கொம்புக்கு நேரா
நிக்கிற கூட்டம்...திமிரான ஆட்டம்
ஆடுறத பாக்க கோடி சனம் கூடும்!

சீறி பாய்ஞ்சு வரும்...
சிங்கமா சிலிர்த்து வரும்...
கொம்ப சிலிப்பிக்கின்னு
எங்க காளை சுத்தி வரும்
புழுதி கிளம்புர களத்துல-கெத்தா ஜல்லிக்கட்டு நடந்து வரும்
இது எந்நாளும் எங்க தமிழ்மண்ணு!
உயிரும் தமிழும் எமக்கொன்னு!

அனைவருக்கும் தமிழர் திருநாள்
நன்றிப்பெருநாள் மாட்டுப்பொங்கல்
நன்னாள் நல்வாழ்த்துக்கள்!

#கவிஞர்_இளையபாரதி

மறையாத சூரியனோ காதல் கவிதை

மறையாத சூரியனோ
மங்காத முழுநிலவோ
தெரியவில்லை!
பெண்ணென வந்து கண்முன்னே
அழகென தோகை விரிக்கிறது
"அவள்" எனும்
பெண் மயில் விந்தையாய்!

நீ சென்ற பின் வரும்
முழு இரவையும்
முன்பகலையும்
உனை காணும் நன்பகல் வரை
முழுவதாய் வெறுக்க வைத்தாய்!

மனமெங்கும் மகிழ்பரப்பி என் எண்ணங்களையெல்லாம்
உன்னோடே இருக்கச்செய்தாய்!

கணினிக்கும் எனக்குமான
இடைவெளியில்
உன் பிம்பம் மட்டும் தெரிகிறதே!?
நீ என்ன "#Virtual_Reality"ஆ!

Mutual Friend Listல் இல்லாமல்
இன்னும் ஏன் இடைவெளி!
கண்களின்
ஒருநொடி Scanning ல்-எத்தனை ஸ்பரிசங்கள் செய்கிறாய்
தெரியுமா!

மனம்விட்டு சொல்லிடும் ஆசை
குளிர் அருவியாய் கொட்டுதடி
என் கோவிலமே!
வாழ்க்கைப் பெருந்துணையாய்
உன் கை பிடிக்கப் பார்க்கிறேன்
மறுக்காதே மயிலறகே!

இதயங்கள் இணைப்புவிழா
கொண்டாடட்டும் - வா
விழா நாயகம் ஆவோம்!

முழங்கால் மடித்து
உன் முன்னே ரோஜா நீட்டிடுவேன்
ஆனால் உன் அழகின் முன்னால்
மரணித்து விடுமே ரோஜா இனமும்!

இதோ...
என் முகநூலைப் பாரடி!
உனக்கென கவிதை படிக்கிறது!
Friend List ல் நீ இல்லை இன்னமும்!
அதனால்தான் என்காதலின்
கடிதங்கள் உன் கண்தரிசனம்
பெறவில்லை போலும்!

உன் முன்னே கடந்துபோகையில்
எப்படி சொல்லிட முடியும்
வெறும் வார்த்தைகளால்
நீ என் உயிரென!

என் கண் பாரடி கலைநிலவே!!
கண்கள் பேசிக்கொள்ளும்
நம் பெருங்காதலை!

வா... வசந்தமே...
வாழ்க்கைத்தென்றல்
வீச செய்வோம் ஒன்றாக!

#கவிஞர்_இளையபாரதி

Friday, 11 January 2019

புது காதல் மனதில்...பூவிதழாய் அவள்!

பன்னீர்த்துளி ஒன்று
ரோஜா இதழ் விட்டு
சேலை கட்டி வந்துவிட்டதோ!
பூ வாசம் தோற்றுப்போகிறது
அவளின் பெண்வாசத்தால்!

வீதியெங்கும் விரவி நிற்கும்
மகிழ் கடலின் புகழ் சேர்க்கிறாள்
பச்சை மலை தோன்றிய
நதியாய் நடை நடந்தே!

கண்கள் மூடியும்
அழகின் காட்சியாகிறாள்!
அருகம்புல் மீதமர்ந்த பனித்துளியாய்
கதிரவன் ஒளியை பிரதி எடுக்கிறாள்!

அந்த மாலைப்பொழுதில்
சிவந்த வானம்
நிரப்பி வைத்த செவ்வொளியில்
மஞ்சள் நிலவாய்
தனித்து தெரிகிறாள்!

இதழ் சிந்தும் புன்னகையால்
இதயம் எங்கும் சிதிலம் செய்தே
மனதின் தடையை
மண்பானையாய் உடைத்து எறிகிறாள்!

மங்களப்பூக்கள் சிதற
காதல் கோட்டையின்
திறப்புவிழா செய்கிறாள்!

இப்பொழுதெல்லாம்
அழைப்பிதழ் இன்றியும்
அமர்ந்து கொள்கிறாள்
இதய சிம்மாசனத்தில் - அவள்
அழைப்பிதழ் இன்றியும்
அமர்ந்து கொள்கிறாள்!

#புரியாமலே_நான்!

Saturday, 5 January 2019

ஏத்தம் எறைச்சு நாங்க...விவசாயி பாடல்

ஏத்தம் எறைச்சு நாங்க
நாட்டுப்புறப்பாட்டு படிச்சுத்தாங்க
கழனியில கதிரு வளர்த்தோம்
அடி அம்மாடி
கழனியில கதிரு வளர்த்தோம்!

கஞ்சிப்பானையில
புளிச்சத்தண்ணியத்தான்
குடிச்சிப்புட்டு
ஏறு புடிச்சோம்
அடி அம்மாடி
குடிச்சிப்புட்டு
ஏறு புடிச்சோம்!

புழுதிக்காட்டுலதான்
உழைப்பக்கொட்டிவச்சு
ஊருக்கெல்லாம்
அரிசி படைச்சோம்

காயிகனிகளோடு
பூக்கள் பழங்களுன்னு
அத்தனையும் வெளையவச்சோம்

கானக்கருங்குயிலு
காக்கைக்கிளிகளோடு
சிட்டுக்குருவிகளும்
கொத்தித்திண்ண
கண்டுமகிழ்ந்தோம்
அடி அம்மாடி
கொத்தித்திண்ண
கண்டுமகிழ்ந்தோம்!

கருக்கொண்ட மங்கையென
உருக்கொண்ட பிள்ளையென
உயர்ந்து வளர்ந்த பயிர்
மகிழ்ந்து நிறைந்த கதிர்
களம்வர தலை சுமந்தோம்
அடி அம்மாடி
களம்வர தலை சுமந்தோம்!

 நீ கண்ட பசிக்கெல்லாம்
 நான் கண்ட பொருள்தந்து
உன்னைக்காத்து நின்று
உலகை வாழவைத்த
விவசாயி
 நாங்களல்லோ
அடி அம்மாடி
விவசாயி
 நாங்களல்லோ

காலங்காலமாக
கட்டிக்காத்த நிலம்
காஞ்சு போக
மனங்களங்கிட கண்ணீர் வடிச்சோம்
அடி அம்மாடி
களங்கிட
கண்ணீர் வடிச்சோம்

ஏரி குளம் வெட்டாம
ஆறுகள இணைக்காம
 நிலத்துத்தண்ணி வத்திப்போச்சு!
வாழ்க்கை இப்போ
வானம் பார்த்த பூமியாச்சு
அடி அம்மாடி
வானம் பார்த்த பூமியாச்சு!

உழைப்புக்கேத்த
கூலியில்லை
விலை சொல்ல உரிமையில்லை
எல்லாம் இப்போ வணிகமாச்சு
ஏ வாழ்க்கையுந்தான்
கருகிப்போச்சு
அடி அம்மாடி
வாழ்க்கையுந்தான்
கருகிப்போச்சு!

எனக்கு மட்டும் ஆச்சுதுன்னு
ஏளனமா விட்டீங்கண்ணா
கணக்கு இங்கே தப்பாப்போகும்
அந்த கடவுளுக்கும் வயிறு காயும்
சும்மா விட்டுப்புட்டா
கடவுளுக்கும் வயிறு காயும்!

Wednesday, 2 January 2019

Single_Feeling - பாடல்

Loveu பண்ண ஒரு பொண்ணு வேணுமே
அன்பக்கொட்ட ஒரு ஆளு வேணுமே
டாவடிக்க ஒரு Darling வேணுமே
பேசி சிரிக்க ஒரு Figureu வேணுமே
சாமீ...நீ என்ன பண்ணுற
காமீ..கலர்புல் பொண்ணதான்...

சாமீ...நீ என்ன பண்ணுற
Single ஆகவே இருக்க வைக்குற
கண்ணுக்கு அழகா பொண்ண காட்டு நீ
என்னை பிடிக்கத்தான்
சொல்லி அனுப்பு நீ

PUB க்குள்ள நான் போகவேணுமே
போதும்... single Pass தான்
வேணும் Couple Pass தான்
காட்ட.. செம்ம mass u தான்

Text Chat எல்லாம் Waste ஆ கெடக்குது
Data Balance u வீனா போகுது
Bike u seat u மே Feel பண்ணுது
பொண்ண ஏத்த சொல்லி
Torture பண்ணுது

சாமீ...2K கிட்ஸ் எல்லாம்
love Status ஆ வெச்சு தொலைக்கிறான்
Meme போட்டுத்தான்
90s கிட்ஸவே கடுப்பு ஏத்துறான்

எங்க... எங்க... என் life u பார்ட்னரு
காட்ட சொல்லி தான்
Heart உம் பேஜார் பண்ணுதே!
சாமீ . கொஞ்சம் Favour பண்ணிவிட்டுரு
Love அ settle ஆக்கி விட்டிரு!

#Single_Feeling