Translate

Thursday, 16 August 2018

கலைஞர் மறைவு - இரங்கல் !😢

அஞ்சுகத்தின் நெஞ்சம் நிறை மன்னவா
எம் ஆறறிவை
இயங்க வைத்த
தலைவா...!

நித்தமும் வஞ்சக மனிதர்
வழி மறிக்கும் வாழ்வில்
வாள், வில்லென
சொல்லாயுதம் ஏந்தி
சுழன்றடித்த சூரியனே!

கலங்கரை விளக்கென
நூற்றாண்டாய்
தமிழ் ஒளி வீசிய
கதிரவனே!

கண்ணீர் மழ்கும்
கனவிலும் காணா
சோகம் தந்து
சென்றது ஏன்!

விடியும் சூரியன்
மறைவதென்பது
இயற்கையே என்றானாலும்
நாளை விடியும் எனும்
நம்பிக்கையோடு
இரவை கடந்த
எம் இதயங்களில்
இன்றைய காரிருள்
அச்சத்தை விதைக்கிறதே!

சமூகம் நியதியற்று
சாதிய கொடுமைகளால்,
அதிகார அடக்குமுறையால்
அல்லல் பட்ட நாட்களில்
சமூக நீதி காத்த
கலைஞரே!

இந்திய ஏகாதிபத்தியம்
அடிமைசாசனம் எழுத
முயலும் வேளையில்
தவிக்க விட்டு சென்றதேனோ!

குடிசை விளக்கு தந்து
மங்கையர் மணபரிசு தந்து
முதல் பட்டதாரி சலுகை தந்து
மருத்துவம், பொறியியல்
என கல்விநிலையம் தந்து
இட ஒதுக்கீடும் தந்த
அன்பு தலைவா...!

இன்றும் புதையிடம் வேண்டும் எனும்
"இட ஒதுக்கீடு" போராட்டம் செய்து....
எத்தகைய உயரம் சென்றாலும்
மனித வாழ்க்கை
போராட்டம் என்றானதுதான்
எனும் தத்துவம் தந்து செல்லும்
தலைவா...!

மனம் வெறுத்து
வாழ்க்கை முடக்கி போகும்
எத்தகைய மனிதற்கும்
வாழும் வல்லமை தரும்
வாழ்வை வாழ்ந்து காட்டினாய்!

மரணம் இயற்கையின்
சுழற்சி என்றாலும்
ஒதுங்கி போய்விடா
பெரும் சோகம்
இதயத்தில் வாள் வீசுதே!

தமிழ் பேசும் உன்பேனா
வார்த்தை மவுனிப்பை செய்தது ஏன்!?

எழுதி தீர்ந்ததோ
அன்பு உடன்பிறப்பே என்று....
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
எம்மை சற்றும் மீளா
துயரில் மூழ்கடித்தாயே!

தமிழ் தாயும்
தடுமாறித்தான் போய்விட்டாலோ
"காலமானார் கலைஞர்"     என்று
எப்படி எழுத துணிந்தாள்!

துயரில் துயில் மறந்து
கண்ணீரில் மிதக்கிறோம்!

நான் சுயநல வாதிதான்...
RIP என்று சொல்ல மாட்டேன்
ஒருபோதும்
சாந்தப்படுத்திவிடாதே
உன் ஆன்மாவை!

எம்மோடு இருக்க செய்து
எதிர்வரும் துயரில்
போராடும் வல்லமை தரசொல்லி
துணை நிற்க சொல்!

ஓய்வில்லா சூரியனே....
ஓய்விற்குத்தான் சென்றிருக்கிறாய்.....

காத்திருக்கிறோம்....
கலைஞரே!

#இளையபாரதி

No comments:

Post a Comment