Translate

Tuesday, 21 August 2018

செல்ல நண்பன் - ராமு!

அன்பின் மொழியறிய
இனம் என்றும்,
உறவென்றும் ஏதும் உண்டோ!?

அன்னையின் பேரன்பில்
மகவென்றும்,
மற்றோரென்றும் பிரிவுண்டோ!?

இன்னொரு புதல்வனாய்
இருந்த பெரும் நண்பனாய்
உயிர் கலந்த
செல்லமாய்-ராமு!

கால் நீட்டி கரம்பிடித்து,
வால் ஆட்டி அன்பை பரப்பி,
சேயென மடியில் தூங்கி,
இல்லம் எங்கும் உலவிய
உன்னதன் - ராமு!

அறியாதார் வந்த போதெல்லாம்
ஆளை மடக்கி
நிறுத்தி வைக்கும்
வாசலில்!

அவர்...
நண்பரென்ற உறவை அறிந்து
அன்பையே நிரப்பி வைக்கும்!

ஒரு நாளேனும் அன்னையை(மாரியம்மா அத்தை)
காணவில்லை என்றால்
அன்னம்...தண்ணி... துறந்து நிற்கும்!

எங்கு நாம்
சென்ற போதும்
ஏக்கத்தில்
கண்ணீர் வடிக்கும்!

இன்னுமே
மெத்தையின்றி
வேறெங்கும் உறங்க மறுக்கும்!
முதுகு தட்டி எழ சொன்னால்
கண்களை சிமிட்டி வைக்கும்!

இன்று மட்டும் எப்படித்தான்
நாம் அழுதபோதும்
எழ மறுத்தாய்!
இறப்பென்று பிரிவு சொல்லி
எங்களை கலங்க வைத்தாய்!

நான்காம் மகனாய் நாளெல்லாம் துணை நின்றவா...
நீயும் முடிந்தால் எழுந்து வா!

அன்னை மடி
நீயின்றி
வெறுமையை உணர்ந்து இருக்க...
என் கண்கள் உன் அருகில்...
அமர்ந்தே கண்ணீர் சிந்த...
வாலாட்டும் சேட்டை மறந்துவிட்டாய்!

இயற்கையின் அழைப்பென்று
இருக்கவா முடியும் எங்களால்!
உன் பிரிவில் வாடுகிறோம்
ஒவ்வொரு நாளும்!

#ராமு #ராமு #ராமு

1 comment: