Translate

Monday, 27 August 2018

மகிழ்ந்திருப்போம்_மனிதனாக!

இன்பம் எனும் சூழல்
இல்லாது வாழும் மக்கா...
துன்ப விளக்கில்
விட்டில் பூச்சியாய்
விழுந்து சாக துணியாதே!

அணியாக வரும் நகைச்
சுவைகண்டு சுதந்திரப்படுத்து-உன்
துன்பச்சிறை மாட்டிய மனப்பறவையை!

இயற்கை
மடியென விரித்து வைத்திருக்கும்
பசுமை காட்சிகளில்
கண் பார்வைவிழ சுற்றி வாருங்கள்
மலை தேசங்களை!

நீண்டு கிடக்கும் நீலக்கடல்தனில்
ஓடம் இட்டு ஊர்ந்துசெல்லுங்கள்!
ஒய்வுநேரம் வரும்போதெல்லாம்
ஓடிக்களைத்த உடம்பை
நீர்தனில் நீந்த செய்யுங்கள்!

செவிகளில்
வரிகளை இசை எனும்
இன்பத்தேனில் நனைத்த
இளையராஜா பாடல்களை
பாயச்செய்யுங்கள்!

இதயம் எப்போதும் பூத்து குலுங்கும்
அன்பெனும் மலர்த்தோட்டதை
அனைவர்க்கும் திறந்து காட்டுங்கள்!

வலிகள் தந்துபோகும்
வார்த்தை பூச்சிகளை
ஒருபோதும் வாழவிடாது
உவகை தரும் சொற்களை
சுழற்றி வீசுங்கள்!

உறவு சுகம் பெறும்
மனமும் மகிழ் பெரும்
இன்பம் நிறைந்திருக்கட்டும்...
மகிழ்ந்திருப்போம்_மனிதனாக!

#இளையபாரதி

Friday, 24 August 2018

என் காதலி!

உன்னைத்தேடி தொலைகிறேன்
கண்ணில் பார்வை மறைக்கிறேன்
என்னில் எங்கோ இருக்கிறாய்
இதயம் கூற கேட்கிறேன்!

நித்தம் பிறக்கும் குழந்தையாய்
நாளும் உனக்கென பிறக்கிறேன்!
ஓடிக் களைத்த பொழுதெல்லாம் - உன்
அன்பை அமுதென பருகினேன்!

யாரை கேட்டு சொல்வதோ?
இந்த உலகம் நமக்கென பிறந்ததை!
இன்னும் தூரம் செல்கையில்
காதல் ஜுரம் கூடுமே!

நெருப்பை விழுங்கிய பொழுதென
நீ இல்லா நொடிகள் தவிக்கிறேன்!
கருப்பை வளரும் குழந்தையாய்
நீ இருக்கும் தருணம் மகிழ்கிறேன்!

அன்பை விதைக்கும் நிலமென
உன் இதயம் இருக்க காண்கிறேன்!
உண்மை பேசும் உதடுகள்
காதல் சுவை தர பருகினேன்!

கண்மை பூசிய காதலி உன்
விழிகளில் விழுந்ததை அறிவாயா!?
பெண்மை புனிதம் சேர்க்கும் உன்
பிறப்பின் ரகசியம் அறிவாயா!?

உனக்கென உவமை சொல்லிட
பூமியில் யாரும் பிறக்கல!
அந்த உவகை கொண்ட உயிரென
உந்தன் காதல் அடைகிறேன்!

என்னில் எத்தனை மாற்றங்கள்
அத்தனையும் செய்தவள் நீ தானே!
உன்னில் பிறக்கும் என் குழந்தையும்
நெஞ்சில் வார்க்கும் இன்பத்தேன்தானே!

#இளையபாரதி

Wednesday, 22 August 2018

நாம் தமிழர்!

எங்கே விழுந்தோம்...
அங்கே எழுவோம்...
திங்கள் திசையை
திருப்பிட துணிந்தோம்!
எங்கள் பகையை
நறுக்கிட முனைந்தோம்!

மறத்தமிழச்சி கொங்கை
பால் குடித்த
வேங்கை இனம் ஒன்று
எழுந்திடல் கண்டு
வீசும் பகை காற்றும்
விலகியே ஓடும்!

நஞ்சை நிலமென்னும்
தரணியைஆண்ட
தஞ்சை சோழ
இனம் என எழுந்தே
நெடுங்காவிரியை
கொணர்ந்தே வருவோம்!

புயலென கிளம்பி _வரும்
புலிப்படை கண்ணில்
தனலென எரியும்_பெருந்தீ
எரித்தே முடிக்கும்
எதிரியின் பிணத்தை!

தடையென எதையும்
நினையா மனமே அதை
உடை என முழங்கி
உறுமுதல் கேளீர்!

இனியும்,
ஏளனம் கொண்டு
மதி சூழ்ச்சிகள் செய்யின்
இவன் படை எழுந்தே
உனை எதிர்த்தே வெல்லும்!

அஞ்சி நடுங்கிடு...
அலறி துடித்திடு...
ஒரு போதும் எனை
எதிர்க்க மறந்திடு!

#நாம்_தமிழர்

காவேரி!

செத்தே தொலைகிறாள் 
நெடுங்காவேரி-நீங்கள்
விற்றே தீர்த்த பெரும் மணலால்!

அங்கே,
கன்னட கொடும் மண்ணில் 
அடைத்தே வைத்த 
பெருங்கோடுமை தாளாது

அவள் அழுது புலம்ப
வந்த கண்ணீரும்
புயல் மழையாய் அணை நிரம்ப

நீண்ட நெடும்பாதை தான்கொண்ட காவேரி
கரை நிரம்பி வருகிறாள்
அன்னைத்தமிழ் மடிதேடி!

ஆனந்த பெருநுரையாய் ஆர்ப்பறிக்க
அழகுமகள் வருகிறாள்...!

அள்ளி அணைத்து 
அணைதனில்  தேக்கி 
நிலமகளோடு நீந்தி விளையாட 
ஒரு அணை உண்டோ அரச படுபாவியே!

அவள்...
அழுது புழம்பியே 
கடல்கலப்பதால் தானோ...?
உப்பாய்போனதோ
பெருங்கடல்!

#காவேரி

ஒத்த சடை போட்ட புள்ளை

ஒத்த சடை போட்ட புள்ளை
செத்துட்டேண்டி
கண்ட பின்னே!
மொத்த சனம் ஊருக்குள்ள
ஓ அழக கண்ட பின்னே
திக்கு தெரியாம அட
விக்கி நிக்கும் பாரு!

கண்ணா பின்னா பேரழகி
கண்டேனடி
ஓ அழக...

காந்த கண்ணும் அழகு...
மூக்கும் முழியும் அழகு...
தங்க கண்ணம் அழகு...
ரோஜா இதழ் அழகு...

சங்கு கழுத்து அழகு...
முத்துப்பாசி அழகு...
மொத்தத்தில எல்லாமே...பேரழகு!

உன் மனச தொறந்து தாடி
என் உசுரு வச்சு போறேன்!
அந்த கண்ணை தொறந்து வாடி
நான் காதல் சொல்ல போறேன்!

ஒட்டு மொத்த நாட்டுக்குள்ள
உன்னைப்போல யாருமில்லை
ஒலக அழகி யாரு...
கண்ணாடிய பாரு!

#பாட்டுச்சத்தம்

பிறந்தநாள் வாழ்த்து! அகிலன்!

# போட்டு include செய்யப்பட்டவனே!
நீ என்றும் எங்களின் stdio!
Void ஆக main-ல் enter ஆவாய்!

நண்பனாய்
இங்கே DECLARE செய்யப்பட்டாய்!
ஆண் எனும் DATATYPE-ஓடு!

பிறந்தநாள் FUNCTION-ல் ENTER ஆகி
அங்கே
If வைத்து CHECK செய்யப்படுகிறது
உன் பிறந்த தேதி கண்டிசனாய் !

இன்று மட்டும் CONDITION TRUE ஆக
Printf-ல் வெடிக்கிறது
“HAPPY BIRTHDAY “ என்று !
அதனாலே ELSE இல்லை!

FOR LOOP ஆய் சுற்றவிடாது
DO-வாய்
தந்துவிடு SWEET-ஐ !

இனி கொண்டாட்டம்
RUN செய்யப்படும்!
COMPILE தேவையில்லை!
ERROR என்று ஏதுமில்லை!

GETCH போட்டு RECEIVE பன்னிக்கோ
வாழ்த்துக்களை OUTPUT-ஆக!
EXECUTE செய்ய மனம் திழைக்கிறது
மகிழ்ச்சியாக!

RESULT
“HAPPY MOMENTS”

கலைஞர்!

புகழ் மறையா சூரியனே!
பூ என்று உதிரா சூரியகாந்தியே!
மறையா கதிரொளியே!
மாந்தர்தம் விழிச்சுடரே!
மறைந்தும் போனதேனோ!?

இப்போதும்,
துளிக்கண்ணீர்
மறைக்கும் கண்களில்
வியந்தே பார்க்கிறேன்
சிந்தை கவர்ந்த பெருந்தலைவா
உன் உடல் மட்டும் மேற்கொண்ட
இறுதி யாத்திரையை!

உயிரும், புகழும்,
உன் உற்ற தமிழும்,
கற்றதோர் நல்லறிவும்
நானிலத்தில் எம்மோடே
இருக்கும் எந்நாளும்!

#கலைஞர்

நம்பிக்கை!

வாழ்க்கை எதுவென்று
தேடல் நாம் கொண்டு
தேடி செல்கையிலே

இன்பம் வரும் துன்பம் வரும்
உயர்வு வரும் தாழ்வு வரும்
காதல் வரும் பிரிவு வரும்
நட்பும் வரும் பகையும் வரும்

நடுங்கிடாதே துயர் கண்டு!
ஒடுங்கிடாதே பகை கண்டு!
வெகுண்டு எழு சினம் கொண்டு!

தோல்விகளை தோள் தட்டு
முயற்சி எனும் முதல் கொட்டு
வெற்றி எனும் முரசு கொட்டு!

உனக்கென்றும்... எனக்கென்றும்...
நமக்கென்றும் வாழ்வுண்டு!
வாழ்ந்திடுவோம் மகிழ் கொண்டு!

வா! வா! என் தோழா!
எழுந்து வா! என் தோழா!

#இளையபாரதி

Tuesday, 21 August 2018

செல்ல நண்பன் - ராமு!

அன்பின் மொழியறிய
இனம் என்றும்,
உறவென்றும் ஏதும் உண்டோ!?

அன்னையின் பேரன்பில்
மகவென்றும்,
மற்றோரென்றும் பிரிவுண்டோ!?

இன்னொரு புதல்வனாய்
இருந்த பெரும் நண்பனாய்
உயிர் கலந்த
செல்லமாய்-ராமு!

கால் நீட்டி கரம்பிடித்து,
வால் ஆட்டி அன்பை பரப்பி,
சேயென மடியில் தூங்கி,
இல்லம் எங்கும் உலவிய
உன்னதன் - ராமு!

அறியாதார் வந்த போதெல்லாம்
ஆளை மடக்கி
நிறுத்தி வைக்கும்
வாசலில்!

அவர்...
நண்பரென்ற உறவை அறிந்து
அன்பையே நிரப்பி வைக்கும்!

ஒரு நாளேனும் அன்னையை(மாரியம்மா அத்தை)
காணவில்லை என்றால்
அன்னம்...தண்ணி... துறந்து நிற்கும்!

எங்கு நாம்
சென்ற போதும்
ஏக்கத்தில்
கண்ணீர் வடிக்கும்!

இன்னுமே
மெத்தையின்றி
வேறெங்கும் உறங்க மறுக்கும்!
முதுகு தட்டி எழ சொன்னால்
கண்களை சிமிட்டி வைக்கும்!

இன்று மட்டும் எப்படித்தான்
நாம் அழுதபோதும்
எழ மறுத்தாய்!
இறப்பென்று பிரிவு சொல்லி
எங்களை கலங்க வைத்தாய்!

நான்காம் மகனாய் நாளெல்லாம் துணை நின்றவா...
நீயும் முடிந்தால் எழுந்து வா!

அன்னை மடி
நீயின்றி
வெறுமையை உணர்ந்து இருக்க...
என் கண்கள் உன் அருகில்...
அமர்ந்தே கண்ணீர் சிந்த...
வாலாட்டும் சேட்டை மறந்துவிட்டாய்!

இயற்கையின் அழைப்பென்று
இருக்கவா முடியும் எங்களால்!
உன் பிரிவில் வாடுகிறோம்
ஒவ்வொரு நாளும்!

#ராமு #ராமு #ராமு

Sunday, 19 August 2018

வா.. வா.. பெண்ணே..வா!

உலகம் உனதாய் இருக்கும்
வாடி பெண்ணே!
தடைகள் இனியும் உடையும்
வாடி பெண்ணே!
பெண்மையின் புகழை
உலகம் உணரும் வாடி பெண்ணே!

நீ வந்தால் நதியாய் வருவாய்...!
நீ வந்தால் நெருப்பாய் இருப்பாய்...!
நீ வந்தால் நிலவும் வெல்வாய்...!
வா.. வா.. பெண்ணே..வா!

இணையத்தில் இணைந்தும் இருப்பாய்!
தடையங்கள் வைத்தே வெல்வாய்!
மடமைகள் புதைத்தே வருவாய்!
வா.. வா.. பெண்ணே..வா!

சிறை வைத்த கூட்டத்தை ஒழிப்பாய்!
பறை வைத்து வெற்றியை உரைப்பாய்!
தடை என்ற விளங்கினை உடைப்பாய்...!
வா.. வா.. பெண்ணே..வா!

தடை என்று எதுவும் இல்லை!
பெண்ணென்றால் அடிமை இல்லை!
ஆணுக்கு குறைவும் இல்லை!
வா... வா.. தீ முல்லை!

பூவைத்தான் நெருப்பில் வைக்க
இனி யாரும் துணிவது இல்லை
புயலைத்தான் புடவையில் மறைக்க
இது ஒன்றும் பழங்கதை இல்லை!
வா.. வா.. பெண்ணே..வா!

நெருப்பென்றே திமிறி எழுந்து
நெஞ்சத்தில் துணிவை விதைத்து
புயலாக நீயும் எழுந்து
வா...வா... பெண்ணே...வா!

Saturday, 18 August 2018

பனிக்காற்று!

முகிலோடு தவழ்ந்திடும் பனிக்காற்றே...
முன்னே வந்து மோதிடு பனிக்காற்றே...
வெண்மேகம் கூட்டிவா பனிக்காற்றே...
விருந்தொன்று வைக்கிறேன் பனிக்காற்றே...

என் மேலே படர்ந்திடு பனிக்காற்றே...
இதயம் படர்ந்திடு பனிக்காற்றே...
இரவாக சேர்ந்திடு பனிக்காற்றே...
இமை ஓரம் உலவிடு பனிக்காற்றே...

என் காதல் கேட்டிடு பனிக்காற்றே...
அவள் காதில் சொல்லிடு பனிக்காற்றே...
அழகான மாலையில் பனிக்காற்றே...
அவள் மடி தவழ்ந்திடு பனிக்காற்றே...

புல்மேலே கிடக்கிறேன் பனிக்காற்றே...
அவளிடம் சொல்லிடு பனிக்காற்றே...
நான் காதல் சொல்கையில் பனிக்காற்றே...
துணையாக இருந்திடு பனிக்காற்றே...

தூரிகை பிடிக்கையில் பனிக்காற்றே...
நீ வந்து அமர்ந்திடு பனிக்காற்றே...
அவள் முகம் வரைகிறேன் பனிக்காற்றே...
வண்ணங்கள் சேர்த்திடு பனிக்காற்றே...

பேரழகி அவளென பனிக்காற்றே...
உண்மையை பரப்பிடு பனிக்காற்றே...
அவள் முகம் பார்க்கையில் பனிக்காற்றே...
வெட்கத்தை தவிர்த்திடு பனிக்காற்றே...

விண்மீன் அழைக்குது பனிக்காற்றே...
நீ என்னோடு இருந்திடு பனிக்காற்றே...
அவள் கனா செல்கிறேன் பனிக்காற்றே...
அன்பினை சொல்லிடு பனிக்காற்றே...

#இளையபாரதி

Thursday, 16 August 2018

கலைஞர் மறைவு - இரங்கல் !😢

அஞ்சுகத்தின் நெஞ்சம் நிறை மன்னவா
எம் ஆறறிவை
இயங்க வைத்த
தலைவா...!

நித்தமும் வஞ்சக மனிதர்
வழி மறிக்கும் வாழ்வில்
வாள், வில்லென
சொல்லாயுதம் ஏந்தி
சுழன்றடித்த சூரியனே!

கலங்கரை விளக்கென
நூற்றாண்டாய்
தமிழ் ஒளி வீசிய
கதிரவனே!

கண்ணீர் மழ்கும்
கனவிலும் காணா
சோகம் தந்து
சென்றது ஏன்!

விடியும் சூரியன்
மறைவதென்பது
இயற்கையே என்றானாலும்
நாளை விடியும் எனும்
நம்பிக்கையோடு
இரவை கடந்த
எம் இதயங்களில்
இன்றைய காரிருள்
அச்சத்தை விதைக்கிறதே!

சமூகம் நியதியற்று
சாதிய கொடுமைகளால்,
அதிகார அடக்குமுறையால்
அல்லல் பட்ட நாட்களில்
சமூக நீதி காத்த
கலைஞரே!

இந்திய ஏகாதிபத்தியம்
அடிமைசாசனம் எழுத
முயலும் வேளையில்
தவிக்க விட்டு சென்றதேனோ!

குடிசை விளக்கு தந்து
மங்கையர் மணபரிசு தந்து
முதல் பட்டதாரி சலுகை தந்து
மருத்துவம், பொறியியல்
என கல்விநிலையம் தந்து
இட ஒதுக்கீடும் தந்த
அன்பு தலைவா...!

இன்றும் புதையிடம் வேண்டும் எனும்
"இட ஒதுக்கீடு" போராட்டம் செய்து....
எத்தகைய உயரம் சென்றாலும்
மனித வாழ்க்கை
போராட்டம் என்றானதுதான்
எனும் தத்துவம் தந்து செல்லும்
தலைவா...!

மனம் வெறுத்து
வாழ்க்கை முடக்கி போகும்
எத்தகைய மனிதற்கும்
வாழும் வல்லமை தரும்
வாழ்வை வாழ்ந்து காட்டினாய்!

மரணம் இயற்கையின்
சுழற்சி என்றாலும்
ஒதுங்கி போய்விடா
பெரும் சோகம்
இதயத்தில் வாள் வீசுதே!

தமிழ் பேசும் உன்பேனா
வார்த்தை மவுனிப்பை செய்தது ஏன்!?

எழுதி தீர்ந்ததோ
அன்பு உடன்பிறப்பே என்று....
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
எம்மை சற்றும் மீளா
துயரில் மூழ்கடித்தாயே!

தமிழ் தாயும்
தடுமாறித்தான் போய்விட்டாலோ
"காலமானார் கலைஞர்"     என்று
எப்படி எழுத துணிந்தாள்!

துயரில் துயில் மறந்து
கண்ணீரில் மிதக்கிறோம்!

நான் சுயநல வாதிதான்...
RIP என்று சொல்ல மாட்டேன்
ஒருபோதும்
சாந்தப்படுத்திவிடாதே
உன் ஆன்மாவை!

எம்மோடு இருக்க செய்து
எதிர்வரும் துயரில்
போராடும் வல்லமை தரசொல்லி
துணை நிற்க சொல்!

ஓய்வில்லா சூரியனே....
ஓய்விற்குத்தான் சென்றிருக்கிறாய்.....

காத்திருக்கிறோம்....
கலைஞரே!

#இளையபாரதி

வயல்வெளியில் ஒரு விவசாய பெண்!

பச்சைப்புற்களின்
மெல்லிய தாலாட்டில்
நுனி உறங்கும் பனித்துளிகள்
பிரதி எடுத்துக்கொள்கின்றன  புன்னகையில் மகிழ் பரப்பும் பேரழகியை!

நாளைய
சோற்று பருக்கைகள்
கருக்கொண்ட இன்றைய பொழுதில்
சேற்று ஒப்பனையில்
சிரிப்பழகி!

வறப்போரம் வந்துசேரும்
தண்ணீரும் அவள்
கால் பணிந்தே
நாற்றுகளிடை சென்று சேரும்!

வயலில்
வாய்நிறைய புன்னகை பூத்திட்ட
தாய் நிலத்தின்
தமிழ்ப்பெண்ணிவள்!

மேனி தீண்டும் ஆடையிலே
போலி மினுக்கில்லை
சேறு நிறைந்த சேலையிலே
பேரழகும் குறைவில்லை!

மின்னும் மூக்குத்தி
சொல்லும் தனிக்கவிதைகள்
கேட்டே முளைத்தெழும்
நாற்று மழலைகள்!

நெற்கதிரென்னும்
பசுமை போர்த்திய
பொன்னாடையே
இவள் உழைப்பிற்கு
பேரங்கிகாரம்!

நாளை
வரும் சோற்றுப்பருக்கைகள்
வீண் செய்யா
நன்செயலே
நாம் தரும் தேசிய விருது!

#இளையபாரதி
#விவசாயம்

தங்கை மகள் - ஹாசினி

அன்பின் மொழியில்
ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும்
என்னை பார்க்கும் போதெல்லாம்
"மாமா..."  "மாமா..." என்கிறாள்!

காரணம் இன்றியே
கண் அடிக்கிறாள்!

எங்கோ தொலைவில்
நான் இருப்பதாய்
ஒவ்வொரு முறையும்
பறக்கும் "முத்தம்" தருகிறாள்!

நான்கு பற்கள்
நன்றாக தெரியும் படி
மழலை மாறா
புன்னகை பூக்கிறாள்!

எனக்கென்றே நலினமாய்
நடந்து காண்பிக்கிறாள்...!
அள்ளி அணைக்கச் சொல்லி
வாஞ்சையோடே
கரங்கள் நீட்டுகிறாள்!

இத்தனை நாட்கள்
இல்லாத காதலை
காவேரி என
கரை புரள வைக்கிறாள்!

ஆயுளின் பெருமகிழ்வை
அங்கம் தோறும் நிறைக்க வைத்து
நெஞ்சில் இன்பத்தேன்
நிறைத்து வைக்கிறாள்!

அவள்...அவள்....
ஆம்... அவள்...

என்...
அன்பு தங்கை மகள்...

ஹாசினி...!

#தாய்மாமன்
#இளையபாரதி

காதல் மழலை

மீசை முறுக்கி மின்னல் தரித்து
ஆசை கணவன் அருகில் வர
பாச வலைவீசும் பெண்ணால்
நேச கரம் நீட்டி நெஞ்சில் அணைக்கிறாள்!

காசுக்கடவுளை தேடிக்கொணர்ந்திட
நாளும் கிளம்பிடும்
நன்முத்து மணியை
பாவை உதடுகளால்
முத்தமிட்டு நெற்றி நிமிர்கிறாள்!

வாசல் படிவரை
வந்து நின்று வழியனுப்பி
பறக்கும் முத்தங்களை
பட்டம் விடுகிறாள்...!

வீசும் காற்றிலே
விரைந்து பறந்திடும் முத்தம்
அவனுக்கு முகமலர்ச்சி தந்து
வேலை சென்றிட
வழியனுப்பி விடுகிறது!

நாளும் பொழுதெல்லாம்
நங்கை காத்திருக்க
வரும் மாலை வேளையில்
மல்லிகையை தன்கை கொணர்ந்து
பாசமங்கையின் வாச குழலிலே
வஞ்சயோடு வைக்கிறான்!

இரவு பொழுதங்கே
விரகம் தந்திட
பரதம் ஆடும்
பைந்தமிழ் முத்தங்கள்
பொன்மேனி ஊர்ந்தே
காம ரசத்தினில்
கட்டில் நிரப்புது!

ஆடை துறந்திட்ட
நாணல் மேனிகள்
நலினமாகவே காதல் பேசிடும்
வேலை வந்தங்கு
விரகதாபம் விதையுமாகுது!

மழலை ஒன்றங்கே
மடியில் சேர்ந்திட
குவியல் குவியலாய்
மகிழ்வங்கே நிறைகிறது!

மனங்கள் யாவுமே
மழலை பேசிட
நற்குணங்கள் யாவுமே
நளினம் காட்டுது!

அன்பு மொழிகளில்
அன்னைதந்தையர்
பாசம் காட்டிட
உலவும் இறையென
பழகும் குழந்தையும்
மலர் போலவே
மனங்கள் நிறைக்குது!

மழலை பேரானந்தம்!

தலைவனுக்கு ஒரு கடிதம்

வா! வா! தமிழா!
கருணையின் முகிலாய்!
முத்தமிழின் முதல்வனே!
எத்திக்கும் நின்புகழ்
இசையென ஒலிக்கும்!!!

உன்னைவிட பெருமையும் இல்லையே!
உன்னிடம் இமயமும் சிறுமையே!
உம்மைஈன்று தமிழுக்கு அணிபூட்டிய
அஞ்சுகத்தின் நெஞ்சுநிறை நின்ற எம்மன்னவா!
உம்பேனா வடித்த இரத்தமெல்லாம்
தமிழின் தியாகம் சொல்ல
சிந்திய சித்தாந்தமன்றோ?!!!

பொன்மாலையென நீவிர் சூட்டிய
பன்மாலை பாமாலை – அதுவே
தமிழின் பூமாலை புகழ்மாலை!!!

கள்ளமில்லா கள்வனே
ஏன் திருடினீர் ???
எம்கோடித்தமிழர் இதயத்தை!!!
உயிர்த்துடிப்பெல்லாம் உம்மிடமே!

பயிர் வாடியதற்காய்
உயிர் வாடிய தமிழன்
வாழ்ந்திருப்பானே நீ வாய்த்திருந்தால்
அரியணை நீ வாய்த்திருந்தால்!!!
உம்மிடத்தில் இல்லாதுபோன
இறைவனும் இருப்பானேயானால்
உம்மைப்போல்தானே எமக்கு!!!!

அரியணை உம்மை அமர்த்தி
பெருமை கொண்ட நாட்கள்தான்
யாமெல்லாம் உயிர்வாழ்ந்த காலம்!!!
யாக்கையும் காக்கைகொள்ள
உயிரற்ற ஜடமாய் வாழ்கிறோம் இன்று ,
உம்மிடம் மறுத்த செங்கோலால்!!!

கபட நாடகத்தில்
கண்துடைப்போரெல்லாம்
அரியணை கண்டதால்
நூற்றாண்டுகள் கண்டிரா சோகம் – ஆனால்
நூறாண்டுகள் போற்றும் சாதனையாம் – மடையர்கள்!!!

கொள்ளையும் கொலையும்
கொடுங்கோல் நடையும் வலம்வர
மழையும் களைய
மலையும் வளையும்
இவர் செய்யும் கொடுமையால்!!!

கருத்தின் கழுத்துக்கு கயிறுதந்து
பேனா நுனி உடைத்து
“சென்னாப்போதர்” வாழ்ந்த தமிழ்நாட்டில்
சொல் “நா” அறுக்கத்துடிக்கும்
அநியாயம் தான் நாட்டில்!

காட்டில் உள்ளோறாய்
சிரம் தாழ்ந்து
கரம் பணிந்து
வீரத்தமிழன் கர்வம் தொலைத்தனர்
இன்று அமைச்சரவை மந்திரிகள் – வெட்கம்!!!!

நடை மறந்து குழந்தையென நீவிர்
தவழ்ந்தபோதும் தரணிபோற்றும் நின்செயல்
தமிழர்க்கு என்றென்னும்போது
இருநூறாண்டு இளமைபெற்ற எம்தோழா
யாமிருப்போம் நின் தோழாய்!

தமிழமுதென்ற சொல்லால்
நின் ஆணை ஒன்றே போதும்
வாளாய் வேலாய்
வறுமை கொல்லும் வில்லாய்
அணை கட்டித்தடுக்கப்பட்ட
எங்கள் இரத்தமெல்லாம்
புயலென பொங்கி
புரட்சி செய்யும் தமிழ் நிலத்தில்!

நம் உயிர் தமிழுக்காய்!
குறளால் “திருக்குறள்” தந்து
தரணிக்கும் தலைவனாய்
தமிழனை உயர்த்திய
வள்ளுவனுக்கு வான்தொடும்
சிலை தந்த வாழும் “வள்ளுவரே”!!!

மலையென நின்புகழ் உயர
இன்று வந்தவர்
உளியென குடையப்பார்க்கிறார் – உம்மையும் ,
உப்புக்காற்றால் குடையப்பார்க்கிறார்  வள்ளுவரையும்!!!!

அதற்கும் “நா” தந்து காத்த கருணையே
உமைக்கான வேண்டும் கண்களே!!
எந்தன் கண்களே!!!
வாய்ப்பொன்று கிடைக்குமா ???
வான் சூரியனை காண!!!???

உதயசூரியனாய் உள்ளத்தில்
உதிக்கும் உன்னதமே
உன்னிடம் உருகும் என் அகமே!!!!
என்பால் உள்ள தமிழால்
உன்பால் கொண்ட அன்பால்
பண்பால் உயர்ந்த பகலவனுக்கு – கடிதம்!
என்றும் என்றென்றும்
நின்பால் அன்புகொண்ட உடன்பிறப்பு!!!

இளங்கோ பாடல்

அடியே கருப்பி...
ஏண்டி life-u ல வந்த பசப்பி...
ஏன் மனசுல...
உன்ன வச்சு நிரப்பி...
என்ன செஞ்சு போயிப்புட்ட... கருப்பி...

single மனச
Mingle ஆக்கி சென்றவளே..
Jungle பூச்சி போல
என்ன கொன்றவளே...

காட்டுதீயை
கண்ணில் வச்சு சாச்சுப்புட்ட
உன்னில் என்ன
மூழ்கடிச்சு போயிப்புட்ட

ஒரு நாளும்
நீயின்றி போகாதென்று
நிழல் போல
நெஞ்சத்தில் நெரஞ்சுப்புட்ட

ஏண்டி செல்லகருப்பி
என்னில் காதல் நிரப்பி
இப்போ நீ மட்டும்
தனியாக போனாயே
ஏண்டி...??? செல்லகருப்பி?

உன் உறவெல்லாம் இப்பக்கூட பொய்தானடி...
உன எண்ணி வாழ்ந்த நானும்
தெரு ஓரம்டி...

உன்னாலே விசமாகி
உள் நெஞ்சம் ரணமாகி
பெரு நெருப்பொன்னு
எரியுதடி...

காதல் ஒரு வானவில்லு..
கதை விட்டியே...
வெறும் கொஞ்ச நேரம் தானேயின்னு கெளம்பிட்டியே...

நரபலியும் என்ன போட்டுவிட்டியே!
நரம்பிளையும்
காதல் ஏத்தி விட்டியே!

ஒருவார்த்தை பேசாமல்...
ஒரு பார்வை பார்க்காமல்...
நெடுநாளாய் நீ இல்லை...
நெஞ்சத்தில் தீ முள்ளை...
எரிந்தேதான்...கொன்றாயோ...
பிரிந்தே தான் சென்றாயோ...

காதல் மொழியாலே
சாதல் வரம் தந்து
என்ன செஞ்ச என்னை?
நீ இல்லா நிமிடங்கள்
அனல் தீயாய் கொதிக்கிறதே...

வெறுப்பென்ற மொழியாலே
கருப்பான மை பூசி
அழித்தாயே..சிதைத்தாயே...

பெருந்தீயில் பூ ஒன்றை...
புரியாமல் எரிந்தாயே?

ஆனாலும்
உம்மேலே வச்ச காதல்
கோபமாக
என்னுள் இன்னும் வாழுதடி!