Translate

Tuesday, 30 October 2018

English -U Song-U

I just wanna know that something baby...!
Am I.?am I.? your sweet heart-O!?
Ur Love beat-O!?
Let me know... let me know...
that love beauty! Hey You Sweety!

All my days U are my... dream scene-U!
Single-U Heart Full ah...Love Wine-U!
when You are... There in street
Eyes Full ah Green Scene-U!

Hey Naughty...U beauty
Love Party Let's Do that-U!
Hey Sweety...Honey Tasty...
When you Come closer
Fire Sparks comes out-U!

Hey...Hey..hey..
Your Eveys-U that is very nice-U!
That Smiling libs-U
Always Sweet Box-U

#Song_Under_Composing
#Englishu_poetu

Sunday, 21 October 2018

சுதந்திரம்... உரிமை...!


சுதந்திரம்... உரிமை...!

அது யாருக்கும் கொடுக்கப்படவேண்டும். ஆனால் அதை மிக சரியாக பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அது மிகப்பெரிய கேள்விகளையும், நிரந்தர தடையையும் எதிர்கொள்ள நேரிடும்.

அப்படியாகத்தான் நான் தாழ்த்தப்பட்டோர் பாதுகாப்பது தொடர்பான சட்டம்,பெண் உரிமை, பெண் சுதந்திரத்தை பார்க்கிறேன். வரதட்சணை தடை சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. மிக கொடுமையான பாதிப்புகளை தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருந்த வரதட்சணை கொடுமை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 
ஆனால் அதற்கு பின்னர், அதை தவறான வழியில் பயன்படுத்தி , தவறு செய்யாத ஆண்களையும் தண்டிக்க செய்தனர்.

அது போலவே, இப்போது சபரிமலை விவகாரம். பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. ஆனால், அந்த உரிமையை வெற்று விளம்பரத்திற்கும், போலி புரட்சிக்கும் பயன்படுத்தும் போது... உண்மையிலேயே பக்தியோடு,சரியான விரத முறைகளை கடைபிடித்து கோவிலுக்கு வர எண்ணும் பெண்களுக்கான உரிமையும் கேள்விக்குரியதாக மாறிவிடுகிறது.

ஆடை சுதந்திரம், பாலியல் சமத்துவம், வேலைவாய்ப்பு, சம்பள சமவிகிதம் என்பன போன்ற பெண் உரிமைகள் விவாதத்திற்கு இடமின்றி பெண்களுக்கும் சம அளவு, பங்கீடு இருக்கிறது.

ஆனால், வெறும் வர்த்தக ரீதியான காட்சி பொருளாக பொது வெளியிலும், தொலைக்காட்சி, சினிமா ஊடகங்களிலும் பெண்களின் ஆடை சுதந்தரம் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

அது போலவே...#METOO வையும் நாம் பார்க்க வேண்டும். யாருமே மறுக்க முடியாத வண்ணம், பாலியல் சீண்டல்கள், வற்புறுத்தல்கள் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

அப்படி உண்மையாக வெளிப்படுத்தும் நபர்களுக்கான பேராபத்தாக ஆண்களைவிட,
போலியாக பழி வாங்கும்  அல்லது பழி சொல்லும் வகையில் பயன்படுத்தும் நபர்கள் தான் என்பதை உணரவேண்டும்.

அதுவே...
உண்மையான சம உரிமை, சுதந்திரத்தை பெற்றுத்தரும். மேலும் பெண்களுக்கான வாய்ப்பை பெண்களே தவறாக பயன்படுத்துவதை...முழு மூச்சாக பெண்கள்தான் முதலில் எதிர்க்க வேண்டும். அதுவே, சமத்துவம் பேசும் அனைவருக்குமான பாதுகாப்பாக இருக்கும்.

#பெண்உரிமை
#சபரிமலை
#MEETO
#தவறான_பயன்பாடு

Tuesday, 16 October 2018

இரவிலே சூரியன் உறவினை சேரும் - கவிதை

இரவிலே சூரியன் உறவினை சேரும்
வரும் பகலிலே வெறுமையில் கோபங்கள் வெயிலென உமிழும்!

நிலவது விளக்கினை ஏற்றியே செல்லும்
குளுமையை தந்துதான்
உறவின் வெக்கை போக்கும்!

சூரியன் சுடுமென
பூக்களின் மேலே
பனித்துளி சேர்வதாய்
உதடுகள் தேன்துளி நனைத்துதான்
காதலை பேசும்!

அருவியென விழுந்திடும்
தண்ணீர் யாவும்
தபாங்கள் தீர்க்கவே
பூமியில் பாயும்!

புதுஉயிர் பிறந்திடும் பொழுதெல்லாம்
புன்னகை தேசத்தில்
மகுடங்கள் பூக்களை சூடும்!

அந்தியில் வானமும்
மஞ்சளை பூசியே
மங்கலம் சேர்க்கும்!

மீண்டும் வரும் நாட்களும்
இதையே சுழற்றும்!
தேடி தேன்பருகின
காதலின் ஜீவன்கள்!

கண் சிமிட்டி புன்னகைப்போம்
நாளுமே நாமும்!

#இளையபாரதி

Sunday, 14 October 2018

வைரமுத்து-சின்மயி விவகாரம்

வைரமுத்து-சின்மயி விவகாரம்.

சிறந்த தீர்வு...

இனி வரும் காலங்களில் ,
எந்த மாதிரியான பாலியல் சீண்டல்களையும் உடனுக்குடன் எதிர்கொண்டு, ....
இனி எப்போதும், எவருக்கும் நடக்காமல் இருக்க சூழல் அமைத்து கொடுப்போம்.

பாதிக்கப்படுபவர்...
வெளிப்படையாக பேச வாய்ப்பு தந்து கேட்பதற்கு செவிதிறந்து காத்திருப்போம்.

இது நாள் வரை நடந்ததை வெளிப்படுத்தும் வாய்ப்பும் இருக்கவே செய்கிறது. ஆனால், அது எந்தவித குற்றம் இழைக்காத யாரோ ஒரு நபரையும் வஞ்சத்தோடு... பழி தீர்க்கும் வாய்ப்பாகவும் அமைந்துவிடும் எனும் அச்சமும் இருக்கிறது.

உண்மையாகவே... தவறு செய்தவருக்கான தண்டனை என்ன என்பதை வரையறுக்க இயலா சூழல் இருக்கிறது எனும் எதார்த்தமும் நம்மை சூழ்கிறது.

விருப்பமின்றி கட்டாயத்திற்கு உள்ளானவரும்,
வாய்ப்பு கிடைத்தால் சரி என்று "இடம்" அளித்தவரும், இப்படியான சூழலை எதிர்கொண்டும் தவறிழைக்காதவரும் இருக்கின்றனர்.

அவர்கள், தங்களின் சுய நடத்தையை அப்பழுக்கற்ற முறையில், கேள்விகளுக்கு இடமின்று பரிசோதிக்கட்டும். மேலும், தத்தமது
தனிப்பட்ட விருப்பத்தின் படியே #METOO ல் கருத்து தெரிவிக்கட்டும்.

ஆனால், அது தவறு செய்தவர்கள் மட்டுமே வெளிப்படுவதை உறுதி செய்யட்டும். மேலும், அதிலே, இன்னார் செய்தால் கடந்து செல்வது... இன்னார் செய்தால் மட்டுமே ஊளையிடுவது எனும் பாகுபாடு இருக்குமாயின்... நிச்சயம் தவரிழைத்தவரினும் மோசமான குற்றவாளி, குற்றம் சுமத்துபவரே ஆகும்.

மேலும் எந்த ஒரு மூன்றாம் நபரும், தங்களின் தனிப்பட்ட வெறுப்பு, விரோதத்தை தீர்த்துக்கொள்ளும் இடமாக, வாய்ப்பாக இல்லாது இருத்தலுமே உண்மையான வழிமுறையாகும்.

திட்டமிட்டே தவறிழைத்தவரும்,
முயன்று பார்ப்போம் என்று "இடம்" பெற்றவரும் இல்லாத வருங்காலத்தை உருவாக்கலாம்.

#முயன்று_பார்ப்போம்

பசி என்னும் மரணம்!


பசி தரும் மரணங்கள்!

எங்கே போகிறோம் நாம்!???

நான் வழக்கமான பாதையைவிட்டு புதிதாய் சில தினங்களில் தான் மற்றொரு பாதையில் நடக்க ஆரம்பித்தேன்!. அங்கே, தாயின் பேரன்பில், இயற்கையின் மர நிழலில் 7 நாய்க்குட்டிகள் அங்கும்...இங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருந்தன.

புதிதாய் பிறந்த சிற்றுயிர்கள் தான். ஒன்று பால் குடித்தும், மற்றொன்று படுத்துக்கொண்டும் இருந்தன. இன்ன பிறகுட்டிகள் அந்த சாலையின் இரு புறங்களுக்கும் தூது சென்று கொண்டிருந்தன.

தாய்மையின் களிப்பை உணர இயலாத களைப்பில், அந்த தாய் நாய் இருந்தது.
ஆம்... அரை வயிறு நிரம்பவே உணவு கிடைக்காத நேரத்திலும்,அடி வயிறு பால் சுரக்க வேண்டுமல்லவா.!?

அடுத்த நாள்... அதே பாதை.... அதே காட்சி. ஆனால் சிறு மாற்றம். அத்தனை குட்டிகளும் படுத்தே இருந்தன. உற்று பார்த்த போது...மூச்சு விடவும் வலிமை இன்றி... நிலத்திற்கு கண்ணீர் தானம் செய்திருந்தன .

எலும்புகள் பசியின் கொடுமையை வெளிக்காட்டிக்கொண்டு இருந்தன. தாய் மட்டுமல்ல குட்டிகளின் உடம்பிலும் தான்.

எளிதாய் கடந்து சென்றாலும்.... ஏனோ...? என் மனம் அங்கேயே சுழல தொடங்கியது.
"மனிதர்களுக்கு மட்டுமே' என தண்ணீரும், உணவும் படைக்கப்பட்டதாய்
நவீன கால விதிகள் சர்வாதிகாரம் செய்யபட்ட நாடு அல்லவா இது.
அந்த விதிகளின் விளையாட்டு என் மன கேள்விகளுக்கு இட ஒதுக்கீடு செய்திருந்தது.

அதனாலேயே... அலுவலகம் வந்த பின்னும் பேசிக்கொண்டு இருந்தேன்... அந்த உயிர்களுக்கு எங்கு இருந்து உணவு கிடைக்கும் என்று.
நிச்சயம், அவை பெரிய பசிக்கொடுமையில் வாடித்தான் படுத்திருக்க வேண்டும்.

நான் மறுநாள் நிச்சயம் அவைகளுக்கும் உணவு எடுத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனபோதும்,
இறைவன் அவர்களுக்கு இன்றைக்கான உணவின் வழியை காட்டிவிட வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டேன்.

அடுத்தநாள், எழுந்திருக்கும் பொழுதே அவைகளுக்கான உணவு செய்ய வேண்டும் எனும் மகிழ்வோடே எழுந்தேன். சமையல் முடித்து, எனக்கும், அவற்றிற்கும் தனித்தனி டிபன் பாக்ஸில் உணவு எடுத்துக்கொண்டு வந்தேன்.

அவை இருக்கும் இடம் வந்ததும் ஒரு சிறு பதற்றம். அங்கே, அந்த நாய் கூட்டத்தை காணவில்லை. திடீரென தாய் நாய், குட்டியின் அருகில் பறந்த, ஒரு காக்கையை விரட்டி சென்றது.
ஆகா... தாய்மையின் சிறப்பல்லவா... என்று வியப்பை உணரும் நேரத்தில் ஒரு பேரதிர்ச்சி. நேற்று, கண்ணீரோடு பசியில் வாடிய குட்டி.... இன்று மரணித்து இருந்தது.

அந்த நொடி, ஒட்டு மொத்த மனித இனத்திற்க்கான குற்றஉணர்ச்சியும் என்னை தாக்கியது. தாய் நாய் சோகமே உருவாக... இறந்த குட்டியின் அருகில் காக்கைகள் வராமல் பார்த்துக்கொண்டு இருந்தது.

மற்ற குட்டிகள்... நாளை வந்துவிடும் நமது மரணமும்... இப்படித்தானே நம்மை கிடத்தி இருக்கும் எனும் சோகத்தில் அதை நாக்கால் தடவி விட்டபடி சுற்றி நின்றன.

உடைந்த மனதோடு... நான் கொண்டு வந்த டிபன் பாக்ஸை திறந்து உணவை கொட்டி வைத்து... அவற்றை அழைத்தேன். உணவைத்தேடி...ஒன்றும் வருவதாய் இல்லை.

சில நொடிகள் சிலை என ஆகிப்போனேன்.  அப்போது... தாய் நாய் மட்டும் வந்து உணவை முகர்ந்து பார்த்தது. சரி... இப்போதாவது உணவை திங்கும் என்று எண்ணினேன். அவற்றின் மொழியால், குட்டிகளை அழைத்தது. தான் உண்பது போன்று தோரணை செய்தது, குட்டிகளாவது உண்ணட்டும் என்று.

அவை... என்ன... மனிதர்களா!????
யாருமே...ஒரு சிறு பருக்கையையும் உண்ணாமல் விலகி சென்றன. ஒரு கேள்வியோடு... !
இந்த சோற்றை நேற்றே தந்திருந்தால்... ஒரு உயிர் போயிருக்குமா!???

#குற்றவாளி
#நேற்று_நான்
#இன்று_நீ
#நாளை_நாம்

மற்ற உயிர்களுக்கு என்றும் ஒரு கை அரிசி சமைப்போம்!

"உலகம் மனிதர்களால் ஆனதுமில்லை.
மனிதர்களுக்கு மட்டும் ஆனதுமில்லை."
#இளையபாரதி

Tuesday, 9 October 2018

வாழ்க்கை எதுவென்று - பாடம்!

வாழ்க்கை எதுவென்று
தேடல் நாம் கொண்டு
தேடி செல்கையிலே

இன்பம் வரும் துன்பம் வரும்
உயர்வு வரும் தாழ்வு வரும்
காதல் வரும் பிரிவு வரும்
நட்பும் வரும் பகையும் வரும்

நடுங்கிடாதே துயர் கண்டு!
ஒடுங்கிடாதே பகை கண்டு!
வெகுண்டு எழு சினம் கொண்டு!

தோல்விகளை தோள் தட்டு
முயற்சி எனும் முதல் கொட்டு
வெற்றி எனும் முரசு கொட்டு!

உனக்கென்றும்... எனக்கென்றும்...
நமக்கென்றும் வாழ்வுண்டு!
வாழ்ந்திடுவோம் மகிழ் கொண்டு!

வா! வா! எழுந்து வா!
என் தோழா எழுந்து வா!

#நம்பிக்கை
#இளையபாரதி

ஒரு கதை சொல்லட்டா காதலி!

ஒரு கதை சொல்லட்டா காதலி!

கல்லூரியில் நாம் சேர்ந்திட இரண்டாம் நாள். சாலையின் ஒரு பக்கத்தில் நீயும் , மறுபக்கத்தில் நானும் நடந்து சென்றோம்.

ஒரு சேட்டை காற்று சுழன்று அடித்தது. வழிப்பறி செய்ததுபோல உன் துப்பட்டாவை தூக்கிவந்து, என் முகத்தில்
முத்தமிட செய்வதாக முகம் முழுவதும் நிரப்பி வைத்தது.

பதறியவளாய் ஓடி வந்து, கன்னங்களில் குழிவிழும் சிறு புன்னகையோடு கை நீட்டினாய். நான் உன் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டு, துப்பட்டாவை நீட்டினேன்.

உன் கன்னக்குழிகளில் விழுந்த நான்,
நீ சென்ற சில நிமிடங்களில்
எழுந்தபோது என் இதயத்தில்
காதல் நிரம்பி இருந்தது.

தொடரும்....

பாடல்-ஓ இந்த மாலை!

ஓ! இந்த மாலை...பெண்ணே!
நீ வந்த வேலை
என் நரம்புகள் நடமாடுதே!
ஹே!...நளினத்தில் குயில் பாடுதே!

சிக்கிக்கொண்ட காற்றில்
சில்வண்டு சிறகாடுதே!
சில நேரம் பூக்கள்...
தனனன தலையாட்டுதே!

உயிரோடு மெல்ல
உன் சுவாசம் செல்ல
உடல் இங்கு பனியாகுதே!

பறப்பற பட்டாம்பூச்சி
தொடுத்தொடு தொட்டுப்போக
ஒட்டிக்கொண்ட வண்ணங்களை
ஒத்திக்கொண்ட கண்ணங்களே
என் முத்தங்களை வாங்குங்களே!

ஒருவொரு வெள்ளைப்பூவை
தினம்தினம் காதல் கொண்டு
தேடிச்சென்ற தேன்வண்டுகள்
தேகம் எங்கும் பூ முத்தங்கள்!

கண்டுவிட்ட நானும்
வந்துவிட்டேன் தேடி
எங்கே என் பங்குகள்
மிச்சம் இன்றி தாருங்களே!
தவனைகள் இல்லை
அதில் தவறுகள் இல்லை!

நெடுவயல் யாவும்
நிரம்பிய பச்சை
விழிகளில் விருந்தானதே!

மழை கொஞ்சம் வேண்டும்
மயில் கொஞ்சம் வேண்டும்
இசை இங்கு வேண்டும்
இன்பத்தில் நாம் ஆடலாம்!
இயற்கையை பண் பாடலாம்!

பெண்ணே!
என்ன தயக்கம்
நீ வந்துவிட்டால் தொடங்கும்
பேரின்ப பெரும்பண்டிகை!

#இளையபாரதி

பெட்ரோலிய_காதல்!

கச்சாஎண்ணெய் விலைபோல
என்காதல் உம்மேலே
ஏறிக்கிட்டே போக
பெட்ரோல் விலைபோல
பாசம் உந்தன்மேல
நாளும் கூடுதே!

ஆனா என்ன செய்ய
அரசாங்கம் போல
இத கண்டுக்காம நீ போற!

ஐயோ மனசு இங்க
மக்கள் போல
மாட்டிக்கிட்டு தவிக்குதே!

#பெட்ரோலிய_காதல்

ஓ! காக்கை குருவிகளே

ஓ! காக்கை குருவிகளே!
உம் சிறகை தாருங்களே!
இந்த பொழுதுகள் நெடுந்தூரம்
என்னை கூட்டி சென்றிடுமே!

இன்றைய சென்னை trafic இல்
வண்டிகள் செல்ல வழி எங்கே!?
செல்லும் வண்டிகள் குடித்துவிட்ட
பெட்ரோல் பொருளின் விலை என்ன?

எண்ணெய் விற்கும் கடையினில்
என்னை விற்றாலும் பத்திடுமா?
பாதை கடந்து சென்றிடவே
உந்தன் சிறகை தாருங்களே!

#இளையபாரதி

அந்திமாலை

சட்டென நீயும்
கண்கள் சிமிட்ட
தொட்டதே வானம்
போதும் போதும்!

உன் கன்னங்கள் மோதும்
காற்றை பிடித்து
சிறையில் அடைக்க
தோன்றும் தோன்றும்!

செவ்விதழ் ஓரம்
பூக்கும் சிரிப்"பூ" எல்லாம்
என்னையே வந்து சேரும் சேரும்!

மாயம் செய்யும் மாலைப்பொழுதில்
மேற்கே சூரியன் மஞ்சள் குளிக்கும்
நீர்துளி ஒன்று உன்னை சேர்ந்து
பொன்னிறமாக முகத்தில் மிளிரும்!

அந்த சிலநொடி...
நான் சிக்கித்தவிப்பேன் பாரடி - நீ
வரும்வழி யாவும் இங்கே
வாசனை பரவும் நுகரடி!

நுனிப்புல் ஆடும் பனித்துளி மேலே
உன் பிம்பம் விழுந்து அதிசயம் ஆகும்!
இந்த காட்சிகள்
காதலை பருகச்சொல்லி
மது கோப்பையில்
மனதை மூழ்க வைக்கும்!

#காதலன்
#அந்திமாலை
#அவளுடன்_நான்

#இளையபாரதி

முதல் காதல் #1999





இப்பொழுதுதான் மலர்ந்த மலரென
எப்போதும் வசீகரிக்கும் பேரழகு அவள்!
இரட்டைசடை பிண்ணி
இரண்டுக்கும் இணைப்புவிழா நடத்திய கனகாம்பரம் சூடி
வெள்ளை முகத்தில்
மஞ்சள் நாட்டியம் செய்து
புதுப்பொழிவோடே புன்னகைப்பாள்!

நானும் அவளும்
ஒரே வகுப்புதான் பள்ளியில்!
அவளுடன் ஆவலுடன்
பேசும் வாய்ப்புகளை
தேடிக்கொண்டே இருக்கும் மனது!

மதிய உணவிற்கு வீடு செல்வாள்!
பின் சென்றே பழகியது என் கால்கள்!
அவள் திரும்பும் நேரமெல்லாம்
பற்களின் எண்ணிக்கையை
காட்டி விடுவேன்!(சிரிப்பு)

ஒரு கண் மட்டும்
சிமிட்டும் முயற்சியில்
சேர்ந்து கொள்ளும்
மற்றொரு கண்ணும்!
இரண்டு கண்களையும் சிமிட்டி
அம்பு விடும் ஆர்வம்!

எப்போது தான் என்னை பார்ப்பாள்!??
என்ற கேள்வியால் எப்போதுமே
பார்த்திருப்பேன் அவளை!
அப்பப்போ பார்த்தும் விடுவாள்!
அப்பப்பா பட்டாம்பூச்சிகள்
சிறகு விரித்துவிடும்
என் சிறு இதயத்தில்!

சொக்கட்டான் கல்லும்,
நொண்டி ஆட்டமும்
மாலைநேர தரிசனத்தை
காண செய்துடும்!
இரவிலும் கனவில்
முகம் காட்டிவிடுவாள்!

அது காதல் என்ற இலக்கணத்தில்
சேர்ந்திடாத ஈர்ப்பு!
#Love என்ற வார்த்தையாக மட்டுமே
வாழும் ஒரு பேரானந்தம்!

ஒரு மாலை...
ஊர் நடுவே அடிகுழாய்!
பாட்டி..  ஒரு சிறுகுடம் தண்ணீர்
கொண்டுவர சொல்லியும்
மறுத்து ஓடியவன்!

அவள் அடிகுழாயில் நின்றதை பார்த்தபின்,
3 குடம் தண்ணீருக்கே
நிரம்பிய தொட்டியில்
10 குடத்திற்கும் மேல்
ஊற்றிக்கொண்டு இருந்தேன்-அவளால்!

ஒவ்வொரு நாட்களையும்
உன்னதமாக மாற்றிக்கொண்டு இருந்தால் பள்ளி பருவத்தில்!
இப்போதெல்லாம்...
திருவிழா நாட்களில் காண்கிறேன்-அவளை!
இடுப்பில் ஒன்று, அருகில் ஒன்று என
குழந்தைகளோடு!

முதல் காதல்
இதயத்தில் இப்போதும்
இனிமைதந்தே வாழ்கிறது
யாவருக்கும்!

#இளையபாரதி

Sunday, 7 October 2018

புரட்சி

தீயென எழுகவே
தீமைகள் ஒழிக்கவே
புதியதோர் இளைஞனே
தீயென எழுகவே!

மலர்களை அழித்து இங்கு
மணங்களை தேடினோம்!
பிணங்கள் என்று எண்ணியே
நமை பேய்களும் ஆளுதே!

உணர்வின்றி ஒதுங்கியே
வாழும் என் தோழனே
தீயென எழுகவே
தீமைகள் ஒழிக்கவே!

கருத்தியல் புரட்சியே
காலங்கள் வென்றுடும்!
ஒருத்தனும் அரசியல்
பிழைப்பென்று வாழுதல் இல்லா

நாளினை நாமே படைத்திட
பெரும்படையென எழுகவே
புதியதோர் இளைஞனே!
தீயென எழுகவே
தீமைகள் ஒழிக்கவே!

#இளையபாரதி

வீட்டுக்குள்ள காத்து வர fan அ நம்பாத

வீட்டுக்குள்ள காத்து வர fan அ நம்பாத
வெளியபோயி மரத்த வைக்க
சோம்பல் படாத
எதிர்காலம் இருட்டாகி போக கூடாது
யாருக்கும் தண்ணி இல்லா
நெலைமை கூடாது!

மழைதான் பெய்யுங்காலம்
விதைபந்த போட்டா!
வளர்ந்து மரம் நிக்கும்
பச்சை பந்தல் காடா!

எழுந்து வெளிய வாடா
ஏரி குளம் வெட்ட!
மண்ணுல பொன் வெளையும்
பனைய நீயும் நட்டா!

பச்சை பசுங்காடு
எல்லாம் எங்க தேடு?
மலையை murder பண்ணி
செலைய வச்ச நாடு - குடி
தண்ணிக்கு அள்ளாடுது!
குடிச்ச தண்ணியிலும் தள்ளாடுது!

ஊரெல்லாம் செங்கல்காடு
வளத்து வச்ச நாம
காத்துக்கும், தண்ணிக்கும்
காசை கொட்டுறோம்!

இனிமே இயற்கையோட
சேர்ந்து வாழ நாம
வழிதான் செய்யவேணும்!
காடும் மலையும்
கடவுளா வணங்க வேணும்!

ஒத்த நொடியில ஓர விழியில- பாடல்

ஒத்த நொடியில ஓர விழியில
கட்டி இழுத்துட்டுப்போறபுள்ள
மொத்தசனம் நின்னு...
கண்ணு விரிச்சுப்பாக்குதடி

காத்திலாடும் தாவணி
முகத்தில் மோத  யாவும் நீ
ஆகிப்போன தேவியே
மடி சாயவா? மனம் நிறையவா!?

போதும் போதும் என்றுதான்
அன்பை கொட்டும் தேவதை
கருப்பு முகத்தில் ஒற்றையாய்
சிவந்து நிற்கும் பொட்டென
உன்னை நானும் சேர்கிறேன்!

உன்னை என்னில் தேடியே
கடந்து போகும் நாட்களில்
என்னை உன்னில் மறைக்கிறேன்
உலகம் வியக்க எழுகிறேன்!

விழுந்து விழுந்து எழுந்துதான்
உந்தன் மடி சாய்கிறேன்!
இன்று பிறந்த குழந்தையாய்
உந்தன் அன்பில் நனைகிறேன்!

மரங்கள் தோறும்
பறந்து திரியும்
சின்னச்சின்னக் குருவிகள்
சிறகு விரிக்கும் அழகினை
நீயும் நானும் காண்கிறோம்!

திறந்த வானம் பறந்துதான்
காதல்  கீதம் பாடினோம்
உலர்ந்தமேகம் சென்றுதான்
ஒன்று என்று ஆகிறோம்!

#இளையபாரதி

மழை தரும் மாலையே!

மழைதரும் மாலையே
தூரலாய் பூக்கிறாய்!
சாரலில் நனைக்கிறாய்!
சாலையின் பள்ளங்கள்
இல்லமாய் சேர்கிறாய்!

குடையின் உள்ளேயும்
உறவென வருகிறாய்!
மரங்களை நனைத்தும் நீ
துளிகளாய் உதிர்கிறாய்!

சென்னையில் வெள்ளம்வரும்
எனும் புரளிகள் எழுதியே
புழுக்கம் தருகிறாய்!

ரயிலின் ஜன்னல் வழியே
என்பயணத்தில் உடன்வந்து
உடல் முழுதும் நனைக்கிறாய்!

அலுவல் நாட்களில்
பேருந்துகள் குடை கேட்கின்றன
ஊழல் ஓட்டைவழி
உள்ளேயும் ஒழுகுவதால்!

சாலைப்பள்ளங்கள்
மழைநீரோடு உயிரும்
குடிக்கும் ஆவலில்
அரசியல் வியாதிகளால்!

சாக்கடைகள் வெளிநடப்பு செய்கின்றன
சாலைகள் அரவணைக்கும் தைரியத்தில்!
இத்தனையும் பார்த்துவிட்டே
புதைகிறாய் மண்ணில்
மழையே இன்று நீ எம் மண்ணில்!

சின்னப்பொன்னு சித்திரக்கண்ணு - பாடல்

சின்னப்பொன்னு சித்திரக்கண்ணு
சுத்துறா என்னை காத்தாடியா..
மூச்சுமுட்ட பேசிசிரிக்கிறா-செல்ல வாயாடியா

யாரு யாரு யாரிவ
அழகின் அழகு தேவதை
பூவா பூத்த பூமக
புன்னகை ராணி தானிவ

செவ்விதழ் மேனி தேன்மகள்
செல்லச்சேட்டை செய்பவள்
மின்னல் கண்ணில் சாய்ப்பவள்
மிரட்டும் அன்பை தருபவள்

ஹே...களவானியே கதை பேசியே
காதல் தீய வச்ச நீயே!
கண்ணில கலாட்டா
செய்யுற வெளையாட்டா

(சின்னப்பொன்னு)

வம்பில தெம்பா வளைக்கிறா
நெஞ்சுல அம்பா தாக்குறா
ரெட்டை ஜடை வீசுறா
அட்டை படமா அசத்துறா
ஆள முழுசா கவுக்குறா!