பசி தரும் மரணங்கள்!
எங்கே போகிறோம் நாம்!???
நான் வழக்கமான பாதையைவிட்டு புதிதாய் சில தினங்களில் தான் மற்றொரு பாதையில் நடக்க ஆரம்பித்தேன்!. அங்கே, தாயின் பேரன்பில், இயற்கையின் மர நிழலில் 7 நாய்க்குட்டிகள் அங்கும்...இங்கும் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருந்தன.
புதிதாய் பிறந்த சிற்றுயிர்கள் தான். ஒன்று பால் குடித்தும், மற்றொன்று படுத்துக்கொண்டும் இருந்தன. இன்ன பிறகுட்டிகள் அந்த சாலையின் இரு புறங்களுக்கும் தூது சென்று கொண்டிருந்தன.
தாய்மையின் களிப்பை உணர இயலாத களைப்பில், அந்த தாய் நாய் இருந்தது.
ஆம்... அரை வயிறு நிரம்பவே உணவு கிடைக்காத நேரத்திலும்,அடி வயிறு பால் சுரக்க வேண்டுமல்லவா.!?
அடுத்த நாள்... அதே பாதை.... அதே காட்சி. ஆனால் சிறு மாற்றம். அத்தனை குட்டிகளும் படுத்தே இருந்தன. உற்று பார்த்த போது...மூச்சு விடவும் வலிமை இன்றி... நிலத்திற்கு கண்ணீர் தானம் செய்திருந்தன .
எலும்புகள் பசியின் கொடுமையை வெளிக்காட்டிக்கொண்டு இருந்தன. தாய் மட்டுமல்ல குட்டிகளின் உடம்பிலும் தான்.
எளிதாய் கடந்து சென்றாலும்.... ஏனோ...? என் மனம் அங்கேயே சுழல தொடங்கியது.
"மனிதர்களுக்கு மட்டுமே' என தண்ணீரும், உணவும் படைக்கப்பட்டதாய்
நவீன கால விதிகள் சர்வாதிகாரம் செய்யபட்ட நாடு அல்லவா இது.
அந்த விதிகளின் விளையாட்டு என் மன கேள்விகளுக்கு இட ஒதுக்கீடு செய்திருந்தது.
அதனாலேயே... அலுவலகம் வந்த பின்னும் பேசிக்கொண்டு இருந்தேன்... அந்த உயிர்களுக்கு எங்கு இருந்து உணவு கிடைக்கும் என்று.
நிச்சயம், அவை பெரிய பசிக்கொடுமையில் வாடித்தான் படுத்திருக்க வேண்டும்.
நான் மறுநாள் நிச்சயம் அவைகளுக்கும் உணவு எடுத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனபோதும்,
இறைவன் அவர்களுக்கு இன்றைக்கான உணவின் வழியை காட்டிவிட வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டேன்.
அடுத்தநாள், எழுந்திருக்கும் பொழுதே அவைகளுக்கான உணவு செய்ய வேண்டும் எனும் மகிழ்வோடே எழுந்தேன். சமையல் முடித்து, எனக்கும், அவற்றிற்கும் தனித்தனி டிபன் பாக்ஸில் உணவு எடுத்துக்கொண்டு வந்தேன்.
அவை இருக்கும் இடம் வந்ததும் ஒரு சிறு பதற்றம். அங்கே, அந்த நாய் கூட்டத்தை காணவில்லை. திடீரென தாய் நாய், குட்டியின் அருகில் பறந்த, ஒரு காக்கையை விரட்டி சென்றது.
ஆகா... தாய்மையின் சிறப்பல்லவா... என்று வியப்பை உணரும் நேரத்தில் ஒரு பேரதிர்ச்சி. நேற்று, கண்ணீரோடு பசியில் வாடிய குட்டி.... இன்று மரணித்து இருந்தது.
அந்த நொடி, ஒட்டு மொத்த மனித இனத்திற்க்கான குற்றஉணர்ச்சியும் என்னை தாக்கியது. தாய் நாய் சோகமே உருவாக... இறந்த குட்டியின் அருகில் காக்கைகள் வராமல் பார்த்துக்கொண்டு இருந்தது.
மற்ற குட்டிகள்... நாளை வந்துவிடும் நமது மரணமும்... இப்படித்தானே நம்மை கிடத்தி இருக்கும் எனும் சோகத்தில் அதை நாக்கால் தடவி விட்டபடி சுற்றி நின்றன.
உடைந்த மனதோடு... நான் கொண்டு வந்த டிபன் பாக்ஸை திறந்து உணவை கொட்டி வைத்து... அவற்றை அழைத்தேன். உணவைத்தேடி...ஒன்றும் வருவதாய் இல்லை.
சில நொடிகள் சிலை என ஆகிப்போனேன். அப்போது... தாய் நாய் மட்டும் வந்து உணவை முகர்ந்து பார்த்தது. சரி... இப்போதாவது உணவை திங்கும் என்று எண்ணினேன். அவற்றின் மொழியால், குட்டிகளை அழைத்தது. தான் உண்பது போன்று தோரணை செய்தது, குட்டிகளாவது உண்ணட்டும் என்று.
அவை... என்ன... மனிதர்களா!????
யாருமே...ஒரு சிறு பருக்கையையும் உண்ணாமல் விலகி சென்றன. ஒரு கேள்வியோடு... !
இந்த சோற்றை நேற்றே தந்திருந்தால்... ஒரு உயிர் போயிருக்குமா!???
#குற்றவாளி
#நேற்று_நான்
#இன்று_நீ
#நாளை_நாம்
மற்ற உயிர்களுக்கு என்றும் ஒரு கை அரிசி சமைப்போம்!
"உலகம் மனிதர்களால் ஆனதுமில்லை.
மனிதர்களுக்கு மட்டும் ஆனதுமில்லை."
#இளையபாரதி