ஆடைகளைந்த மேனியின் நிர்வாணத்தை
இரசிக்கும் உலகம்
இரசிப்பதில்லையோ?
பொய்யோடு சமாதானம்
செய்யும்
மனசாட்சியின்
நிர்வாணத்தை!
கரைபடியா கரங்கள்
வேண்டும்போது
கையூட்டுபெற நீளும்
கையின் நிர்வாணத்தை!
பொய்க்கு மெய்யென
சாயம் போர்த்திய
வன்மத்தின்
நிர்வாணத்தை!
அமைதிக்கு கேடயம்
சூட்டி
வெடித்து வரும்
வன்முறையின் நிர்வாணத்தை!
பகல் வேஷம் போடும்
இரவுத்திருடனின் உண்மை
நிர்வாணத்தை!
இனிப்பாய் பேசும்
உதடுகள்
தாங்கிநிற்கும்
கசப்பின் நிர்வாணத்தை!
உள்ளொன்று புறமொன்றாய்
ஒளிரும் வஞ்சத்தின்
நிர்வாணத்தை!
இலஞ்சத்தின் மடியில்
இலாவகமாய் வாழும்
நெஞ்சம் மறைக்கும்
தூய்மையின்
நிர்வாணத்தை!
தண்ணீரில் எழுதும்
தங்க எழுத்துக்களாய்
வாக்குறுதி தந்து
போகும்
அரசியல் அதிகாரத்தின்
நிர்வாணத்தை!
கூலிக்காரன் பசியால்
ருசியோடு வாழும் எஜமான்
உணர்வதில்லையோ பகட்டு
முதலாளியின்
நிர்வாணத்தை!
இறைவன் பெயரால்
செல்வங்கள் கூட்டும்
கூட்டம்
உணர்வதில்லையோ போலியான
பக்தியின் நிர்வாணத்தை!
பெற்றோரும் மற்றோரும்
காசோடு பணமும் பகட்டாய்
இருந்தால் மட்டும்
காட்டப்படும்
அன்பின்
நிர்வாணத்தையும்
உணர்வதில்லையோ மானிடம்!
ஒவ்வொன்றின்
நிர்வாணமும்
வெவ்வேறாய் விதர்பமாய்
உடுத்திய ஆடையால்
உருமாறி நிற்கின்றனவே
நிராயுதமான
நிர்வாணத்துடன்!
No comments:
Post a Comment