Translate

Saturday, 9 February 2019

தீபம் யாவும் விழி மூடிப்போன - கவிதை

தீபம் யாவும் விழி மூடிப்போன
நடு இரவின் கருப்பில்
உன் நினைவு என்னில்
வெள்ளை ஒளியாய் வெளிச்சம் போட்டு
மனதின் திரையில் உந்தன் பிம்பம்
காட்டி வைக்கிறதே!

மறந்து போன நினைவின் தூண்டல்
உன்னால் தன்னால் நிகழ்கிறதே!
கண்ணால் பேசி... மனதால் பார்த்து
இதயம் நிறையும் காதல் வேண்டும்!

ஆசை வந்து
ஆளைத்தாக்கும் நேரம் யாவும்
உன் நினைப்பில்
உருகி வடியும் என் இதயவழியை
கேளடிப்பெண்ணே!

இன்னும் இன்னும் காதல் கூடும்
எந்தன் எண்ணம் யாவும்
உன்னை தேடும்!
நீ நடந்து போகும் பாதை யாவும்
பூவாய் வந்து என் இதயம் நின்று
உன்னை தாங்கும்!

ஓ! காதல் தீபம் ஏற்றும் மாலை
காற்றும் வந்து மோதிப்பார்க்கும்
தோற்றுபோயி வெட்கம் வந்து
உன் காலடியில் விழுந்து வாழும்!

மயக்குதே வானம்
மயங்குறேன் நானும்
தயக்கமே தொல்லையே - உன்னிடம் எல்லைகள் தாண்டியே
வருகுதே நினைவு யாவும்!

நீலவானம் நீந்திப்போகும்
நிலவும் கூட உன்னைக்கண்டால்
காதல் செய்ய ஏங்கிச்சாவும்!
நான் மட்டும் விதிவிலக்கா!??
உன் மீது காதல் வைத்தேவிட்டேன்!
இதோ. .இதோ. என் காதல் வரிகள்!

#இளையபாரதி

Thursday, 7 February 2019

முயற்சி- கவியரங்க கவிதை

தீதற்று பிறந்திட்ட பெருந்தமிழே!
பெரும்புகழ் சேர்த்து
வாழ்கின்ற செந்தமிழே...!
இளமை மாறா முதுமை நிறைந்த
மூத்த மொழியே!
மொழிகளின் பேரன்னையே!
நற்சுவை நவிழும் நூல்களின்
நல்சுனையே!
பிரிவற்று பேதங்கள் களைந்து
அறம் கொண்ட அன்புக்கரம் நீட்டும்
இயற்கையோடு இணைந்த தமிழே
புகழ் வணக்கம்!

தமிழ் ஈன்ற திருமகனே!
நல்தடம் பதித்த பெருந்தலைவா!
தமிழன்னை கவிஅணிகள் புனைந்திட கற்பனை சுரங்கம் திறந்தவா!
இக்கவிப்பேரரங்கம் சிறந்திட
தலைமை ஏற்ற பெருந்தகையே
தமிழ் வணக்கம்!

பறந்த பேரவை நிறைந்த தமிழ்ச்சொந்தங்களே!
முத்தமிழ்பால் உயிரிணைத்து
முக்கனித்தமிழ் சுவை பருக
எத்தனித்த பேரவா கொண்டு
கவி அரங்கம் விரவி இருக்கும்
நற்றமிழ் புதல்வர்களே!
இக்கவியின் நல் வணக்கங்கள்!

மகத்துவம் கொண்ட மானுட வாழ்வில் நற்பெயர் பெற்று உயர்ந்திட
அடியேன் எடுத்துரைக்கும்
பெரும் பொருள்-முயற்சி!

எத்தனை இன்பதுன்பங்கள்
எதிர்பட்டாலும் அத்தனையும்
வீழ்த்தி அடியெடுத்து வைக்கும்
பேராற்றல் முயற்சிக்கு மட்டுமே உண்டு!

அறிய பேரறிவு பெற்றாலும்
திண்ணிய திறமைகள் கொண்டாலும்
எண்ணியபடியே இலக்கினை
முயற்சியற்று முடித்தவர் எவருளர்!?

பெரும்பாறையிடத்து ஒரு வித்தும்
நல்நிலமதில் ஒரு வித்தும்
விழுந்த போதும்
நன்னிலமே நான் கொண்டேன் என
சோம்பல் கொண்ட வித்தது(வித்து+அது)
சூம்பி மடிந்த கதை உண்டு!

இடர்பட்டேனும் இன்னமும்
என்னுயிர் பிறந்தெழும் எனும்
திண்ணம் கொண்ட விதை ஒன்றில்
பெரும் முயற்சியால் முட்டி
பாறை இடுக்குகள் உடைத்து
எழுந்து நிமிர்ந்த செடி சொல்லும் முயற்சியே...வெற்றிகள் குவிக்க வல்லதென்று!

நல்லதே பணமும், திறமையும்
உழைப்பும் என்றாலும் இவை
உறங்கிப்போகிடின் ஏது பலன்!?

இவை இல்லா மனிதனும்
புதிதுபுதிதென முயன்று
தோற்றாலும் அது தரும் கற்பிதம்
செய்திடுமே அற்புதம்!

அரிய பெரும் சாதனைகள்
கண்டுபிடிப்புகள் அத்தனையும்
விளைந்தது இடைவிடா முயற்சியினால்
தானன்றி வேறெதில்!

திறமை கொண்டும் அதை வெளிக்காட்டும் முயற்சியற்றோர்
வாழ்வில் முன்னேறி வருதல் என்பது
இலக்கின் எதிர்திசையில்
விரைந்து செல்லும் பரியின்
நிலையாகும்!
ஒரு போதும் உயர்வை நல்கிடாது!

உழைத்து முடித்தவன்
உடல் வியர்வை என
முயற்சி செய்பவன்
திசை எங்கும் வெற்றிகள் முளைக்கும்!
புது சக்திகள் பிறக்கும்!

முயற்சி என்பது
நெஞ்சத்தில் இருந்திட
புகைவண்டி இயக்கிட உதவும்
நிலக்கரி தீயென
மனிதன் சக்திகள் பெற்றே
வெற்றிகள் குவித்து
வாழ்வில் நிலையான உயரத்தை அடைவான் என்றே கவிபாடி

நல்லதோர் வாய்ப்பை
பொன்மாலைப் பொழுதில் நல்கி
தமிழோடு நம்மை உறவாட செய்த
கவியரங்க ஏற்பாட்டாளர்களுக்கும்,
சீரிய தலைமையாய் நின்று
திறம்பட கவிகளின்
நன்மொழிகள் ஒலித்திட செய்த நடுவர்
அவர்களுக்கும்,
கதிர் நிலத்தே விளைந்த பயிரில்
முத்தெது...பதரெது...என்று
கண்டுணரும் பேராற்றல் கொண்டோராய்
பாடிய கவிகளின் தரம் அறிந்து
நல்சுவை பருகிடும்
பார்வையாளர்களுக்கும்
உயிர் தொட்டு யாவுமாய் என்னுள்
நிறைந்திட்ட தாய்த்தமிழுக்கும்
அடியேனின் அன்பு கலந்த
நன்றியும்...வணக்கங்களும்!

#கவிஞர்_இளையபாரதி_ஹரிஹரன்

Sunday, 3 February 2019

அம்மா - கவிதை

உதிரம் பிரித்து கருவைத்தரித்து
உயிரில் உயிரை விதைத்து
ஒவ்வொரு நாளும்
கண்ணயரா இரவுகள் கடந்து
ஈருடல் சுமந்து
ஓருடல் பிறப்பித்த
பெரும் கடவுள் அம்மா!

தனக்கெனும் வாழ்வை
பிறர்க்கென தவத்தின்
வரமாய் கொடுத்தே
பிள்ளைகள் வளர்க்கும்
பெண்மை அவள்-அம்மா!

அன்புக்கடலில் உலவவிட்டு
மழலையின் இன்பஅலைகள்
கரைகடக்கச் செய்பவள்-அம்மா!

இடரென்று எத்தனை வந்தாலும்
அத்தனையும் தாங்கும்
அரண் என்றே முரணின்றி
முத்தங்கள் தருபவள்-அம்மா!
முற்றுப்பெறா அன்பின்
முத்தமிழ் சொல் அம்மா!

எவ்வொரு உயிரிலும்
பிறப்பை தருபவள்
தனியொரு சிறப்பை
தனக்கென அணிந்தவள்-அம்மா!

#இளையபாரதி