Translate

Thursday, 23 May 2013

போராடு


                           
காற்றை கடந்து போ
நதியில் நடந்து போ!
முள்ளாய்க்குத்தும் உலகிற்கு
உன் முகத்தை ஒருமுறை காட்டிவிடு!

மலராய் கிடக்க - உன்பாதையில்
நீ மன்னன் இல்லை உணர்ந்துவிடு!
மகுடம் சூட எண்ணினால்
மரணம் பலமுறை கடந்துவிடு!

வார்த்தை தூற்றும் உலகோடு
வம்புகள் செய்ய மறந்திடு!
தீயை மிதித்து பார்த்திடு!
அதன் காயம் ஒருமுறை வாங்கிடு!

சாயம் பூசா முகத்தோடு
சரித்திரம் படைக்க முனைந்திடு!
முன்னாள் நிற்கும் உலகம்
உனக்காய் மாறும் ஒருநாள்!!!
அந்நாள் காண போராடு!

Sunday, 28 April 2013

நிர்வாணம்



ஆடைகளைந்த மேனியின் நிர்வாணத்தை
இரசிக்கும் உலகம் இரசிப்பதில்லையோ?
பொய்யோடு சமாதானம் செய்யும்
மனசாட்சியின் நிர்வாணத்தை!

கரைபடியா கரங்கள் வேண்டும்போது
கையூட்டுபெற நீளும் கையின் நிர்வாணத்தை!
பொய்க்கு மெய்யென
சாயம் போர்த்திய
வன்மத்தின் நிர்வாணத்தை!

அமைதிக்கு கேடயம் சூட்டி
வெடித்து வரும் வன்முறையின் நிர்வாணத்தை!
பகல் வேஷம் போடும்
இரவுத்திருடனின் உண்மை நிர்வாணத்தை!

இனிப்பாய் பேசும் உதடுகள்
தாங்கிநிற்கும் கசப்பின் நிர்வாணத்தை!
உள்ளொன்று புறமொன்றாய்
ஒளிரும் வஞ்சத்தின் நிர்வாணத்தை!

இலஞ்சத்தின் மடியில்
இலாவகமாய் வாழும்
நெஞ்சம் மறைக்கும்
தூய்மையின் நிர்வாணத்தை!

தண்ணீரில் எழுதும்
தங்க எழுத்துக்களாய்
வாக்குறுதி தந்து போகும்
அரசியல் அதிகாரத்தின் நிர்வாணத்தை!

கூலிக்காரன் பசியால்
ருசியோடு வாழும் எஜமான்
உணர்வதில்லையோ பகட்டு
முதலாளியின் நிர்வாணத்தை!

இறைவன் பெயரால்
செல்வங்கள் கூட்டும் கூட்டம்
உணர்வதில்லையோ போலியான
பக்தியின் நிர்வாணத்தை!

பெற்றோரும் மற்றோரும்
காசோடு பணமும் பகட்டாய்
இருந்தால் மட்டும் காட்டப்படும்
அன்பின் நிர்வாணத்தையும்
உணர்வதில்லையோ மானிடம்!

ஒவ்வொன்றின் நிர்வாணமும்
வெவ்வேறாய் விதர்பமாய்
உடுத்திய ஆடையால்
உருமாறி நிற்கின்றனவே
நிராயுதமான நிர்வாணத்துடன்!

எம் தலைவனுக்கு ஒரு கடிதம் கவிதையால்!!!!!


வா! வா! தமிழா!
கருணையின் முகிலாய்!
முத்தமிழின் முதல்வனே!
எத்திக்கும் நின்புகழ்
சையென ஒலிக்கும்!!!
உன்னைவிட பெருமையும் இல்லையே!
உன்னிடம் இமயமும் சிறுமையே!
உம்மைஈன்று தமிழுக்கு அணிபூட்டிய
அஞ்சுகத்தின் நெஞ்சுநிறை நின்ற எம்மன்னவா!
உம்பேனா வடித்த இரத்தமெல்லாம்
தமிழின் தியாகம் சொல்ல
சிந்திய சித்தாந்தமன்றோ?!!!
பொன்மாலையென நீவிர் சூட்டிய
பன்மாலை பாமாலை – அதுவே
தமிழின் பூமாலை புகழ்மாலை!!!
கள்ளமில்லா கள்வனே
ஏன் திருடினீர் ???
எம்கோடித்தமிழர் இதயத்தை!!!
உயிர்த்துடிப்பெல்லாம் உம்மிடமே!
பயிர் வாடியதற்காய்
உயிர் வாடிய தமிழன்
வாழ்ந்திருப்பானே நீ வாய்த்திருந்தால்
அரியணை நீ வாய்த்திருந்தால்!!!
உம்மிடத்தில் இல்லாதுபோன
இறைவனும் இருப்பானேயானால்
உம்மைப்போல்தானே எமக்கு!!!!
அரியணை உம்மை அமர்த்தி
பெருமை கொண்ட நாட்கள்தான்
யாமெல்லாம் உயிர்வாழ்ந்த காலம்!!!
யாக்கையும் காக்கைகொள்ள
உயிரற்ற ஜடமாய் வாழ்கிறோம் இன்று ,
உம்மிடம் மறுத்த செங்கோலால்!!!
கபட நாடகத்தில்
கண்துடைப்போரெல்லாம்
அரியணை கண்டதால்
நூற்றாண்டுகள் கண்டிரா சோகம் – ஆனால்
நூறாண்டுகள் போற்றும் சாதனையாம் – மடையர்கள்!!!
கொள்ளையும் கொலையும்
கொடுங்கோல் நடையும் வலம்வர
மழையும் களைய
மலையும் வளையும்
இவர் செய்யும் கொடுமையால்!!!


கருத்தின் கழுத்துக்கு கயிறுதந்து
பேனா நுனி உடைத்து
“சென்னாப்போதர்” வாழ்ந்த தமிழ்நாட்டில்
சொல் “நா” அறுக்கத்துடிக்கும்
அநியாயம் தான் நாட்டில்!
காட்டில் உள்ளோறாய்
சிரம் தாழ்ந்து
கரம் பணிந்து
வீரத்தமிழன் கர்வம் தொலைத்தனர்
இன்று அமைச்சரவை மந்திரிகள் – வெட்கம்!!!!
நடை மறந்து குழந்தையென நீவிர்
தவழ்ந்தபோதும் தரணிபோற்றும் நின்செயல்
தமிழர்க்கு என்றென்னும்போது
இருநூறாண்டு இளமைபெற்ற எம்தோழா
யாமிருப்போம் நின் தோழாய்!
வாளாய் வேலாய்
வறுமை கொல்லும் வில்லாய்
எம் தளபதி கரங்களில்
தங்களைத்தந்து
நாடுகாக்க நாங்கள் தயார்!
நின் ஆணை ஒன்றே போதும்
அணை கட்டித்தடுக்கப்பட்ட
எங்கள் இரத்தமெல்லாம்
புயலென பொங்கி
புரட்சி செய்யும் உமக்காய்!
நம் உயிர் தமிழுக்காய்!
குறளால் “திருக்குறள்” தந்து
தரணிக்கும் தலைவனாய்
தமிழனை உயர்த்திய
வள்ளுவனுக்கு வான்தொடும்
சிலை தந்த வாழும் “வள்ளுவரே”!!!
மலையென நின்புகழ் உயர
இன்று வந்தவர்
உளியென குடையப்பார்க்கிறார் – உம்மையும் ,
உப்புக்காற்றால் குடையப்பார்க்கிறார்  வள்ளுவரையும்!!!!
அதற்கும் “நா” தந்து காத்த கருணையே
உமைக்கான வேண்டும் கண்களே!!
எந்தன் கண்களே!!!
வாய்ப்பொன்று கிடைக்குமா ???
வான் சூரியனை காண!!!???
உதயசூரியனாய் உள்ளத்தில்
உதிக்கும் உன்னதமே
உன்னிடம் உருகும் என் அகமே!!!!
என்பால் உள்ள தமிழால்
உன்பால் கொண்ட அன்பால்
பண்பால் உயர்ந்த பகலவனுக்கு – கடிதம்!
என்றும் என்றென்றும்
நின்பால் அன்புகொண்ட உடன்பிறப்பு!!!

கல்லூரி நட்பு


நடுக்கங்கள் நடைபோட –வந்த நாம்
நட்பு மழை நனைந்தோம் !
சர்க்கரை உலகம் புகுந்து
கவலைகளை காற்றில் தூவி
நேற்றும் நாளையும் இல்லாத
இன்றைய உலகில் இனிதாய் வாழ்கிறோம்!

சிரிப்பென்றும் வெறுப்பென்றும்
உணர்வுகளை பகிர்ந்து
கிண்டல் கேலி என
பொழுதுகளை கழித்து மேடை
ஏறும்போதெல்லாம் விழித்து
அதுகண்டும் சிரித்து
அள்ளிப்பருகினோம் ஆனந்தத்தை!

சின்னச்சின்ன சண்டைகளில்
உறவுகளை பிணைத்து
அது தரும் கண்ணீரிலே
கோபங்களை கரைத்து
கரைகடந்து செல்லும் அலையென
ஆர்ப்பரித்த நாட்கள் ஏராளம்!
நம்மில் நட்பின் நளினமும் தாராளம்!

என்றாவது வரும் தேர்வுக்கு
அன்றாவது படித்து தேறினோம்!
அப்போதும் சிரிப்புமலை ஏறினோம் !

கல்லூரி பறவையென
சுற்றிய பொழுதில்
சுதந்திர கொண்டாட்டம்!
பேருந்தும் திண்டாடும்
நாம் செய்த ராஜ்யத்தால்!

சின்னச்சின்னதாய்
சீரிய சினமெல்லாம் சிரிப்புதான்!
முட்டிக்கொண்ட போதெல்லாம் வலியில்லை!
இன்று விட்டுச்செல்லும் போதுதான்
வேதனை விஷம் தாக்க அழுகிறோம்!

தோகையில்லா மயில்கூட்டமே
நகை பூண்ட மனதில்
ஏற்றுக்கொள்வோம்-நாம்
என்றுமே நண்பர்கள்!

அழகு மலர்களாய் அலங்கரித்த
கல்லூரி நாட்கள் கரைந்து போவதேன்!
சின்னதாய் பிரிவு தந்து
பெரிதாய் பிணைக்கும் நாளிதுவோ?

பிரிவுகள் வந்தாலும்
உறவாய் இணைந்திருப்போம்!
சிறகடிக்கும் செல்போன் வழி!
இணையமும் நம்மை இணைக்கத்தான்!
சிகரம் தொட்டும்
கரம் கோர்ப்போம் நட்புடன்!
என்றும் என்றென்றும் நட்புடன்!