Translate

Saturday, 19 February 2022

நன்றிக்காணிக்கை!

 யாது வேண்டும்...?யாது வேண்டும்...?

இனி வேறெது எமக்கு வேண்டும்...?!

இத்தனை பெருங்கருணை கொண்டே

இறையென வந்து நிற்கும்...

எம் ஆசான் நல்வாழ்த்துகள்!


எப்படி நன்றி சொல்வேன்...

இத்தனை பேரன்பில்...

எம்மை மூழ்கித்திழைக்க 

வைக்கும் போது...

என் மூச்சுக்காற்றே...

உமக்கு நன்றி சொல்லவே!


மகிழ்வுடன்!


உங்கள் பிள்ளை!

குருவின் அன்பு நிறைந்த...திருமணவாழ்த்து!

 சுக்கிரன் tr

 சட்டக்காரன்பட்டி


திருமணவாழ்த்து


என் அன்பின்

நிறைசேர் செல்வமே........


உன் கவித்திறன்

கண்டு களிப்புற்றேன்......


நான் எழுதிய

மகவு

என்னுள் நீ நுழைய

வைத்திருக்கிறது......

ஆனந்தம் கொண்டேன்

என் அன்பு மகனே.....


இப்போது...

நான் உன்னுள்

மகவாய்

நிற்கிறேன்......


என் உயிர்ப்பில்

எப்போதும்

உன் நினைவுகளே.......


பெரும் ஆலின்

நற்செறிவு விழுதாய்...

நீ...

நிற்பது கண்டு

பூரிப்படைகிறேன்......


அப்போது...

நான் உனக்கு ஆசான்...

இப்போது..

நீ எனக்கு ஆசான்.....


உன் கவிதையை

என் கவிதைக்கு

கருவாய்

கைக்குள் மூடிக் கொள்கிறேன்......


என் அன்பின்

அருட்செல்வமே.....

அடியெடுத்து வைக்கும்-உன்

இல்லறம்

ஓராயிரம் பேருக்கு

நல்லறமாய்

அமையட்டும்......


என் செல்வமே......


உன்

இல்லக்கிளத்தியோடு

எல்லா வளமும் பெற்று...


நீங்கா உறவு.....

மங்கா புகழ்....

அள்ளக்குறையா செல்வம்..


நிறை செல்வம்

குறையா அன்பு....

பதினாறு பேறுகள்

பல பெற்று

அன்போடு

பல 

கோடான கோடி ஆண்டுகள்

நிறைவோடு

நீவிர் வாழ

என்றென்றும்

இறைவனை

வேண்டி நிற்கும்

உன் ஆசான்


சுக்கிரன்அமுதா

சட்டக்காரன்பட்டி..!

இறையாகிய ஆசான்!

 எத்தனை பேரருள்...

இறையாகிய உம் வரிகளில்...

அத்தனைக்கும் தகுதி படைக்க...

அடியேன் எப்போதும் முயல்வேன்...!

இத்தனைக்கும் யான்...

நின் தாழ் ஒட்டிய சிறு தூசு...!


எப்பெப்போதும்...

என்னுள் நீயே இறையாகிய ஆசான்!

பெருங்கடல் குடிக்க

முயலும் சிறுதுளி...யாம்!


இன்று உம் பேரன்பு கடலில்...

கலந்து நிற்கிறேன்...

நின் வாழ்த்து மொழியில்

மகிழ்ந்து பறக்கிறேன்!


ஆயிரமாயிரம் நன்றிகள்...

என்றும் யான் கொண்டே

நிற்பேன்... நின் தாழ் பணிந்து...!


நின் தாழ் பணிந்து...

உம் அன்பையும்...ஆசிகளையும்

இல்லத்துணையோடு ஏற்கிறேன்!


மகிழ்வுடன்...


இளையபாரதி ஹரிஹரன்

நன்றி மடலும்...அன்பு அழைப்பும்!

 செங்கழனி தேடி விழும் வித்து

செங்கதிர் நீட்டி வளர்ந்து நிற்கும்

ஆயினும் அதன் சிறப்பெல்லாம்

செங்கழனி கொண்ட சிறப்பே!


செங்கதிரோன் பாய்ச்சிய ஒளியில்

துளிர் விட்ட தளிர் ஒன்று

விருட்சமானது "சுக்கிரன்"

பார்வை பட்டதால்!


ஏதுமற்று இருந்தநாளில்

தூதுவனாய் வந்த கல்விஆசான்!

கல்விசாலை பாடம் சொல்லி

கடமை முடித்து செல்லாது

வாழ்க்கை பாடம் சொல்லி

வழித்துணையாய் வாழும் ஆசான்!


வரப்பின் எல்லை தாண்டும்

கிளையை கிள்ளி வைத்து

நல்வழி சொல்லி 

நடைபயில வைத்த நன்னெறி உமது!


ஆறாம் வகுப்பு பையனாய்

இருக்கும் போது

ஆறாம் அறிவை தூண்டி

வார்த்தை மலர்களை

கவி மலர்களாக மாற்ற வைத்தீர்!


மகவு எனும் நின் கவிதை

தந்து என் கவிதை முளைக்க வைத்தீர்!

இதோ இன்று என்னுள்

மூவாயிரம் கவிதைகள் 

இணைய பக்கம் எங்கும்

உலவி நிற்கிறது உம் பெயர் சொல்லி!


இதோ இன்று இச்சிறு மகவும்

மனிதனாய் மாறி

மற்றொரு வாழ்வை தொடங்க

இருக்கிறது..மண மேடை ஏறி!

மனம் நிறைந்த பெண்ணை

மாலை சூடி மாங்கல்யம் கட்டி

மங்கள மண விழா காணும்

எம்மை உம் மனம் நிறைந்து

மகிழ் வாழ்த்து பொழிய

நின் தாழ் பணிந்து 

அன்பு நிறைத்து

மகிழ்வுடன்...

அழைக்கின்றேன்...!


வாருங்கள்...அன்பு கொண்டே வாழ்த்துங்கள்...

உம் மகவை!

🙏💐👏🏻🤝🏻


மதிப்புடன்...

ஹரிஹரன்