செங்கழனி தேடி விழும் வித்து
செங்கதிர் நீட்டி வளர்ந்து நிற்கும்
ஆயினும் அதன் சிறப்பெல்லாம்
செங்கழனி கொண்ட சிறப்பே!
செங்கதிரோன் பாய்ச்சிய ஒளியில்
துளிர் விட்ட தளிர் ஒன்று
விருட்சமானது "சுக்கிரன்"
பார்வை பட்டதால்!
ஏதுமற்று இருந்தநாளில்
தூதுவனாய் வந்த கல்விஆசான்!
கல்விசாலை பாடம் சொல்லி
கடமை முடித்து செல்லாது
வாழ்க்கை பாடம் சொல்லி
வழித்துணையாய் வாழும் ஆசான்!
வரப்பின் எல்லை தாண்டும்
கிளையை கிள்ளி வைத்து
நல்வழி சொல்லி
நடைபயில வைத்த நன்னெறி உமது!
ஆறாம் வகுப்பு பையனாய்
இருக்கும் போது
ஆறாம் அறிவை தூண்டி
வார்த்தை மலர்களை
கவி மலர்களாக மாற்ற வைத்தீர்!
மகவு எனும் நின் கவிதை
தந்து என் கவிதை முளைக்க வைத்தீர்!
இதோ இன்று என்னுள்
மூவாயிரம் கவிதைகள்
இணைய பக்கம் எங்கும்
உலவி நிற்கிறது உம் பெயர் சொல்லி!
இதோ இன்று இச்சிறு மகவும்
மனிதனாய் மாறி
மற்றொரு வாழ்வை தொடங்க
இருக்கிறது..மண மேடை ஏறி!
மனம் நிறைந்த பெண்ணை
மாலை சூடி மாங்கல்யம் கட்டி
மங்கள மண விழா காணும்
எம்மை உம் மனம் நிறைந்து
மகிழ் வாழ்த்து பொழிய
நின் தாழ் பணிந்து
அன்பு நிறைத்து
மகிழ்வுடன்...
அழைக்கின்றேன்...!
வாருங்கள்...அன்பு கொண்டே வாழ்த்துங்கள்...
உம் மகவை!
🙏💐👏🏻🤝🏻
மதிப்புடன்...
ஹரிஹரன்