Translate

Sunday, 20 October 2019

கவிப்போம் கவிதை - தாய்மை

மகவே...என் மகிழ்வே!
மனம் நிறைந்த உன் தந்தை
என் மடி நிரப்பினார்...
பேரன்பு புதையலாய் உன்னை!

நீ கருவாய் உருவான நிமிடம்
ஈடில்லா இன்பத்தின் எல்லைகள்
கடந்து வந்தேன்!
என்னுயிரில் உன்னுயிரை
தாங்கும் பொழுதெல்லாம்
மண் மீது நடந்ததில்லை நான்!
மகிழ் வானிலன்றோ பறந்தேன்!

தாய்மை பதவி தந்த
தனிப்பெரும்...
கருணையடா நீ!
புளிப்பு மாங்காய் தேடின
சுவை மொட்டுக்கள்!
எனக்கான பசி கடந்து
உனக்கான உணவுகள் உண்டேன்!

அடி வயிற்றில் கரம் வைத்தே
மெல்லிறகாய் வருடினேன்...
நீ உலவும் உணர்வைப் பெற!
ஒரு புறமாய் படுத்தே
உன் உயிர் காத்தேன்!

உதைக்கும் உன் கால்கள்
தடம் காட்டும் நேரமெல்லாம்
கண் வியந்தே ரசித்தேன்!
எப்போதும்...
உன் தந்தையின் கரம் கோர்த்தே
இருக்க...ஏங்கிய நாட்களெல்லாம்
பெருந்துணை நீயடா!

அன்று...
கோடி மின்னல்கள் தாக்கியதாய்
தோன்றி மறையும் வலிவந்தே
எனைத்துடிக்கச் செய்தது!
மரணத்தின் வாசல் வரை-உயிர்
சென்று...சென்று..திரும்பி வந்தது
உனதும் எனதுமாய்-உயிர்!

ஏதென்று அறியாத தருணம்...
யாரென்ற தெரியாத நபர்கள்...
நிர்வாணமாய் நான்!
இருண்டு போகும் கண்களின்
கடைசி காட்சி...
உன் தந்தையையே தேடிநின்றது!

இடுப்பு எலும்புகள்
சடக்கென்று உடைவதாய்...
உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே
இருக்க
கண்கள் மூடி....கரங்கள் மடித்து
வலிகள் கடந்தும் வேண்டிக்கொண்டேன்
இறைவனை...!

அப்பொழுதான்...
குவ்வா... குவ்வா... என்றே
அழுகை சத்தம்!
முதலாய்...
உன் அழுகை கண்டு
அகமகிழ்ந்து ஆனந்தம் கொண்டேனடா!

அத்தனை வலிகளும்
கண்ணீரென கரைந்து ஓடிட
தொப்புள் கொடி உறவே
நெஞ்சோடு அனைத்தேன் உன்னை!

மார் நிறைந்து
மனம் நிரம்பி வழியும் அமுதென அன்னையின் உயிர்த்துளி
தாய்ப்பாலாய் நீ அருந்திட
தாய்மையின் புனிதம் அடைந்தேன்
ஆருயிரே... என் அன்பு மகவே!
கோடி முத்தங்களடா...என் பெருநகையே!

#இளையபாரதி

Friday, 4 October 2019

நற்றமிழில் நன்றி மடல்!





புரட்டாசி 17...


பகைசூழ் தமிழ்நிலம் வாழ்
பண்பட்ட மக்களிடத்தும்
வஞ்சக வானரங்கள் அவர்
நெஞ்சக பிணியுடையர்
இனம், மொழி, நிலம் என
யாவும் திரிபு செய்யும்
பொல்லாதார் கருங்கோலில்(ஆட்சியில்)

இனி கட்டாயமே..யாம்
தமிழ் பேசுதலும்...
தமிழ் போற்றுதலும்...
தமிழ் வழி வாழுதலும்...
தமிழ் நிறுவுதலும்...
இனி கட்டாயமே...!

இவ்வழியே யான்
தமிழ்வழியாய்
ஆங்கில தேதி விடுத்து(OCT-3)

#புரட்டாசி_17

எனும் இந்நாளில்
#அகவை_தினம் போற்றி
அக மகிழ்ந்தோம்...!
தமிழ்_இறை #முருகன்
திருவடி வணங்கினோம்!

யாரென்று...
அறிந்தும்...அறியாமலும்...
அன்பை விதைத்து
வாழ்த்து தென்றல் வீசிய

அத்தனை..
நன்மக்களுக்கும்...என்
நெஞ்சம் தோன்றிய
ஈடில்லா அக மகிழ்வின்
பெருமகிழ்வை
நற்றமிழ் மொழித்தேன் கலந்து
நன்றியாய் நவிழ்கிறேன்...!

எங்கும்...தமிழ்... எதிலும் தமிழ்....
அதிலும் யாம்...அன்புத்தமிழ்...
திசை எங்கும் பரப்புவோம்!


பெருநன்றியுடன்
#இளையபாரதி

Thursday, 3 October 2019

தமிழ் (என பொழியும்) தேன் மொழி (மழை நீ)#திவ்யா😍






நன்மையும்...நயபேச்சும்
இன்மையின் இனிமை யாவும்
உன்னையே வந்து சேர்ந்திடும்....!

அன்பும் கருணையும்
உன் நெஞ்சில் இருந்து...மகிழ்ந்திடும்!
இன்னும் பிறரிடம் பிறந்தும்
உன்னை சூழ்ந்திடும் ...!
மகிழ் யாவும் வரமென...
உன் சிரிப்புகள் நிறைந்திடும்...!

பெரும் கல்வியும்...
பேரானந்தமும்...
நல் ஆரோக்கியமும்...
நயம் நிறைந்த வார்த்தை செல்வமும்...
பொன்னும் பொருளும்...
அதனுடன் பொழியும் புகழும்
உன்னை சேர்ந்திடும்...!

இனிக்கும் இளமையும்...
இயல்பில்... நன்னடத்தையும்...
நாவில் நல்சொற்களும்...
அம்மை அப்பனின்...
அன்பு மழையும்...

சகோதர உறவுகளின்
சிறந்த நெருக்கமும்...
நெஞ்சம் யாவும்...நீங்கா பேரானந்தமும்..பெருமகிழ்வும்
என்றும் நிலைத்திட...

இனி வரும் காலம் யாவும்...
நீ இன்பத்தில் திளைத்திட...
அன்பு அண்ணனின்...
ஆசை நெஞ்சில்...
பிறந்து பொழியும்..
இனிய தமிழில்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!💐🎂😍😍