Translate

Thursday, 9 April 2020

சாரல் வீசி... சன்னல் நுழைகிறது... மழை!

வெந்து தகிக்கும் கோடை வெயிலில்
வியர்வை ஊற்று எழுந்து கிளம்பி
அனுமதி பெறாமலே
நம்மை குளிக்கவைக்கிறது...
வெப்பம்!

அதிகாலை முதலே...
சூரியன்...
சற்று போதைக்காரனாய் உலவிட
மேகக்கூட்டங்கள்...
காற்றோடு சேர்ந்து பகடி செய்கிறது!

கொரோனா காலம் என்பதால்
பேய்பிடித்த அபலையென
தென்னை மரங்கள்
தலையை விரித்து ஆடுகிறது...

சுழன்று அடிக்கும்
காற்றின் கட்டளைக்கு
கதவும் சன்னல்களும்
அடித்துக்கொள்கின்றன!

வெளிச்சத்தை விழுங்கி
இருள் ஒன்று இருமாப்பு கொண்டே
உலவித்திரிகிறது!

குளிர்காற்று வந்து
நண்பனாக நம்மிடையே
கை குலுக்கி மெய் சிலிர்க்க வைக்கிறது!

ஓ!
பாருங்கள்...அந்த பெருமழையை...
அகந்தை இன்றி கீழ்விழுகிறது!
மேகங்கள் உடைந்து
பன்னீர் தெளிப்பதாக
குளிர் மழை பெய்கிறது!

நனைந்து சிலிர்த்த
தென்னைமரங்கள்
கூந்தல் உலர்த்துகிறது போலும்!
தோகைகளை பறக்கவிட்டு
சலசலக்கிறதே!

ஆகா!...
வெந்து தணிக்கும்
கோடை அரக்கனிடம் இருந்து
விடுதலை தருவதாக...
வாசல் வரை வந்து சொல்கிறது...
மழை...
ஆம்..மழை...
இதோ எம்முன்!
சாரல் வீசி...
சன்னல் நுழைகிறது...
மழை!

#இளையபாரதி

No comments:

Post a Comment