Translate

Saturday, 11 April 2020

கொரோனா..கொலைகாரனா!?

விண்ணைத்தாண்டி
விளையாடி
வந்துவிட்டோம்
என்று கூறிய மானுடம்
வாசல்வர இயலாது தவிக்கிறது!

அணுஆயுதம் தாங்கிய
ஏவுகணைகள் ஏராளம்
என்றே
கொக்கரித்த ஏகாதிபத்தியம்
ஏனோ இன்று
இறப்புகளை
எண்ணிக்கொண்டு இருக்கிறது!

அனைத்து உயிர்களுக்கும்
அடிப்படை உரிமையாய்
இயற்கை ஏராளமாய்
கொடுத்தே இருக்கிறது!

ஆனால்...
என்ன செய்ய
மனிதக்கூட்டம் மட்டுமே
அதை அபகரித்துக்கொண்டது!

இயற்கையின் கற்பை
இயன்றவரை சூராடியே
வைத்து இருக்கிறது மனிதம்!
எல்லாம் வென்றாகிவிட்டது
என்றே சொல்லிக்கொண்ட தருணத்தில்
தனி ஒருவனாய்
வந்து நிற்கிறான்
கொரோனா!

இயல்பை தொலைத்து
ஓடித்திரிந்த கூட்டம்
இன்று...
ஒதுங்கி நிற்கிறது!
உயிருக்கு அஞ்சி நிற்கிறது!

வாழ்க்கை எதுவென்று
வாத்தியாராய் பாடம் சொல்கிறதோ
கொரோனா!
வீட்டுக்குள்ளே இன்றுதான் நாம்
உறவுகளை
தேடிக்கொண்டு இருக்கிறோம்!

இயற்கையின் இன்னபிற
பிள்ளைகளாம்
விலங்குகள்...பறவைகள்...
மரங்கள்...மலைகள்...
ஆறுகள் அருவிகள்...யாவும்
இப்பொழுதுதான்
தன் வாழ்வை தொடங்கி
இருக்கின்றன!

இதோ இந்த கொரோனா
பேரழிவை மட்டும் தரவில்லை...
மனிதம் தொலைத்த
பெரும் பொக்கிஷங்களை
சமிக்கையால் காட்டிக்கொண்டு
இருக்கிறது!

இனியேனும்...மானுடம்...
இயற்கையோடு
இணைந்து வாழட்டும்!
உயிர்கள் யாவற்றிற்கும்
உலகம் இதுவென
உணர்ந்து வாழட்டும்!

விரட்ட வேண்டியது
கொரோணாவை மட்டுமல்ல
இயற்கைக்கு எதிரான
நம் செயல்களையும் தான்!

இன்னல் கடந்து வெல்வோம்
இனியும் நாம்
இன்னல் கடந்தும் வெல்வோம்!
தனித்து நின்றும்
இணைந்தே வெல்வோம்...!

Thursday, 9 April 2020

சாரல் வீசி... சன்னல் நுழைகிறது... மழை!

வெந்து தகிக்கும் கோடை வெயிலில்
வியர்வை ஊற்று எழுந்து கிளம்பி
அனுமதி பெறாமலே
நம்மை குளிக்கவைக்கிறது...
வெப்பம்!

அதிகாலை முதலே...
சூரியன்...
சற்று போதைக்காரனாய் உலவிட
மேகக்கூட்டங்கள்...
காற்றோடு சேர்ந்து பகடி செய்கிறது!

கொரோனா காலம் என்பதால்
பேய்பிடித்த அபலையென
தென்னை மரங்கள்
தலையை விரித்து ஆடுகிறது...

சுழன்று அடிக்கும்
காற்றின் கட்டளைக்கு
கதவும் சன்னல்களும்
அடித்துக்கொள்கின்றன!

வெளிச்சத்தை விழுங்கி
இருள் ஒன்று இருமாப்பு கொண்டே
உலவித்திரிகிறது!

குளிர்காற்று வந்து
நண்பனாக நம்மிடையே
கை குலுக்கி மெய் சிலிர்க்க வைக்கிறது!

ஓ!
பாருங்கள்...அந்த பெருமழையை...
அகந்தை இன்றி கீழ்விழுகிறது!
மேகங்கள் உடைந்து
பன்னீர் தெளிப்பதாக
குளிர் மழை பெய்கிறது!

நனைந்து சிலிர்த்த
தென்னைமரங்கள்
கூந்தல் உலர்த்துகிறது போலும்!
தோகைகளை பறக்கவிட்டு
சலசலக்கிறதே!

ஆகா!...
வெந்து தணிக்கும்
கோடை அரக்கனிடம் இருந்து
விடுதலை தருவதாக...
வாசல் வரை வந்து சொல்கிறது...
மழை...
ஆம்..மழை...
இதோ எம்முன்!
சாரல் வீசி...
சன்னல் நுழைகிறது...
மழை!

#இளையபாரதி