கடவுளுக்கு ஒரு கடிதம்!
எங்கெங்கும் நீ இருக்கின்றாய் என்பதை எப்போதுமே உணர்ந்தவன்.என் எண்ணத்தில்...
நீ உறைகின்றாய், என் செயல்களில் நீயே நிறைகின்றாய் இறைவா என
இப்போதும் உரைப்பவன்.
ஆனபோதும் உன்னோடு
முறனுண்டு எனக்கு!
அதனால், எப்போதும் எந்த
முன்னுரிமையையும் பணம் கொடுத்து பெற்றுவிடாமல், அனைவரும் சமம் என்று பொது தரிசனத்திலேயே..
உன்னை கண்டுமகிழ கொள்கைகொண்டவன். அன்றும் அப்படித்தான், நானும் குடும்பமும்..பொது
தரிசனத்திற்காக சிலமணிநேரம் உன் பாதங்களின் அருகே காத்துக்கிடந்தோம். நடை திறந்தது...
மெதுவாக நகர்கின்றது கூட்டம். எண்ணமெல்லாம் உன்னையே தாங்கியபடி நகர்கின்றேன். மனபாரம்
கண்ணீராய் உன்முன்னர் கசிகின்றது. என்னோடு தங்கையின் சிறு குழந்தை... பக்குவமாய் அழைத்துக்கொண்டு
உன்னை தரிசிக்கும் பாதை அடைந்தேன். என் சிந்தனையில் நீக்கமற நீயே நிறைந்து இருந்தாலும், உன்னையையும்
என் சிந்தையில் இருந்து விரட்டி அடிக்கச்செய்யும் படியாக இரு அநியாயக்குரல்கள்.
என காதுகளில்
கடப்பாரையை செருகிக்கொண்டு இருந்தன. சிறு குழந்தையும், நானுமாய் உண்டியலில் மிகச்சிறு
காணிக்கையை செலுத்த எத்தனிதோம்.
ஏய்..சீக்கிரமா நகருங்க.... வாம்மா... வாம்மா.... சீக்கிரம்..போ...போ...
என எங்களையெல்லாம்
விரட்டி அடித்துக்கொண்டு இருந்தது. உன் பாதம் கண்டு.. பெருமகிழ்வு கொண்டு... என் கண்ணீரெல்லாம்
உன் முன்னர் காணிக்கையாக்கிட வேண்டியவன்.... ஆனால் மனமெங்கும் பெரும் வேதனை.உன் முகம்
பார்த்தும்...அதை மனதில் நிலைநிறுத்த இயலாவண்ணம் இந்த குரல்கள் எங்களை கொடுமை செய்கின்றதே
என்று...மீண்டும் மீண்டும்... ஆத்திரம்.
200
வை...200 வை என உன் அருளை.. உன் கருணையை கடைச்சரக்காக்கி... உன் முன்னரே ஏலம் விடுகின்றனரே? இந்தத்தரகர்
கூட்டத்தின் கொட்டம் எப்போது மடியும்? கோவில்களில் மட்டுமா நீ இருக்கின்றாய்? கொடி இலையிலும்...
மலர்ந்த மலரிலும்... வீசும் காற்றிலும்.... விரிந்து கிடக்கும் நிலத்திலும்... பறந்து
கிடக்கும் ஆகாயத்திலும்.... கண் எதிரே படும் காட்சிகள் யாவிலும் நீ... இருக்கின்றாராய்...
நீயே இருக்கின்றாய்! ஆனபோதும் என்ன செய்ய... ஒரு அறம் அற்று உன் கோவில்கள் இயங்கின்றனவே? சாதியில் உயர்ந்தேன்
என அவர்களே சொல்லிக்கொண்டு... உன் அங்கம் தீண்டும் உரிமையில் எம்மை துரத்தி அடிக்கின்றனர்.
உன் அருளையெல்லாம்... மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தார் போல... மிரட்டும் வண்ணம்...
காசு கேட்கின்றனர்...
அனுமதிச்சீட்டும் வேண்டுமோ!
என் மனமே நீ அமர
இடைத்தரகரும் வேண்டுமோ?
பேரொளியாய் நீ இருக்க
பெருங்கருணை கொண்டிருக்க
உன் திருஉருவம் கண்டிடவே
காசு பணம் வேண்டுமோ?
ஆலயம் யாவிலும்
அந்தணர் மட்டுமே
உன் அருகே வேண்டுமோ?
உன் மகவே நான் என்றால்
என் உரிமை போனதெங்கே?
பொன் பொருளும் இருக்குமிடம்
சுகமென்றே நீ சென்றால்
என் மனமே ரனமென்று
இருந்திடத்தான் வேண்டுமோ?
எப்போதும் உன் முன்னர்
யாவருமே ஒன்றுதான்...
என்பதெல்லாம் உண்மையென்றால்
அன்பு செய்யும் திரு மனமே
நீ இருக்க வேண்டுமே...!
அதிகார எல்லையெல்லாம்...
அகங்கார சிந்தையெல்லாம்
நீ உடைக்க வேண்டுமே!
எப்போது செய்திடுவாய்
பதில் ஒன்றும் வேண்டுமே!
இப்போதே நீதி வேண்டும்
பதில் ஒன்றும் தந்திடுவாய்...
எதிர்பார்த்தே எழுதுகின்றேன்
இக்கடிதம் நானுமே!
இறைவா...
அனுப்புகிறேன்.....
கடவுளுக்கு ஒரு கடிதம்!
#இளையபாரதி.