கடவுளுக்கு ஒரு கடிதம்!
எங்கெங்கும் நீ
இருக்கின்றாய் என்பதை எப்போதுமே உணர்ந்தவன்.என் எண்ணத்தில்...
நீ உறைகின்றாய், என் செயல்களில் நீயே நிறைகின்றாய் இறைவா என
இப்போதும் உரைப்பவன்.
ஆனபோதும் உன்னோடு
முறனுண்டு எனக்கு!
பகல்
கனவாய் மாறி என்னை இம்சித்து இருக்கின்றது திருமண தடை.. இத்தடையும் அகன்றிடவே, ஆயிரமாயிரம்... ஆண்டுகள் பெருமை
கொண்ட மதிரையம்பதியை அன்னையாய் ஆட்சி செய்யும் அம்மை மீனாட்சியின் பாதம் பணிந்து வேண்டுதல்
வைக்க... பல முறை முயன்றும் அன்றுதான் நல்வாய்ப்பு வாய்த்தது. இறைவா உன் முன்னர், புழு பூச்சி
முதல் பெரும் மன்னர் வரை அனைவரும் சமம் என்று நினைக்கின்றேன். ஏனெனில் இவை யாவற்றையும், படைத்து, காப்பவன் நீயன்றோ!
அதுவும் மெய்யன்றோ!
அதனால், எப்போதும் எந்த
முன்னுரிமையையும் பணம் கொடுத்து பெற்றுவிடாமல், அனைவரும் சமம் என்று பொது தரிசனத்திலேயே..
உன்னை கண்டுமகிழ கொள்கைகொண்டவன். அன்றும் அப்படித்தான், நானும் குடும்பமும்..பொது
தரிசனத்திற்காக சிலமணிநேரம் உன் பாதங்களின் அருகே காத்துக்கிடந்தோம். நடை திறந்தது...
மெதுவாக நகர்கின்றது கூட்டம். எண்ணமெல்லாம் உன்னையே தாங்கியபடி நகர்கின்றேன். மனபாரம்
கண்ணீராய் உன்முன்னர் கசிகின்றது. என்னோடு தங்கையின் சிறு குழந்தை... பக்குவமாய் அழைத்துக்கொண்டு
உன்னை தரிசிக்கும் பாதை அடைந்தேன். என் சிந்தனையில் நீக்கமற நீயே நிறைந்து இருந்தாலும், உன்னையையும்
என் சிந்தையில் இருந்து விரட்டி அடிக்கச்செய்யும் படியாக இரு அநியாயக்குரல்கள்.
ம்...ம்..ம் .. சீக்கிரம் போங்க..
ஏம்மா நகரும்மா.... ஏய்... வேகமா வா...
என காதுகளில்
கடப்பாரையை செருகிக்கொண்டு இருந்தன. சிறு குழந்தையும், நானுமாய் உண்டியலில் மிகச்சிறு
காணிக்கையை செலுத்த எத்தனிதோம்.
ஏய்..சீக்கிரமா நகருங்க.... வாம்மா... வாம்மா.... சீக்கிரம்..போ...போ...
என எங்களையெல்லாம்
விரட்டி அடித்துக்கொண்டு இருந்தது. உன் பாதம் கண்டு.. பெருமகிழ்வு கொண்டு... என் கண்ணீரெல்லாம்
உன் முன்னர் காணிக்கையாக்கிட வேண்டியவன்.... ஆனால் மனமெங்கும் பெரும் வேதனை.உன் முகம்
பார்த்தும்...அதை மனதில் நிலைநிறுத்த இயலாவண்ணம் இந்த குரல்கள் எங்களை கொடுமை செய்கின்றதே
என்று...மீண்டும் மீண்டும்... ஆத்திரம்.
“ஏனைய்யா.... இப்படி விரட்டுகிறீர்கள்...
சில மணித்துளிகள் தானே எம் அன்னையை பார்க்கின்ற பாக்கியம் எங்களுக்கு. இப்படி அணுவளவும்
அன்பற்று எம்மை துரத்தி அடிக்கின்றீர்கள். இறைவன் திருக்கோயிலிலே கூட சிறு அன்பும்
அற்றவராய் எம்மை துரத்துறீங்க” என்றேன். எல்லாம் உங்களை எல்லோரையும் சாமி தரிசனம் பார்க்க
வைக்கத்தான் “என்றார்.
ஆனால் கொடுமை என்னவென்றால்...என் இறைவனின்
தரிசனத்தை கெடுப்பதே அவர்கள் தான். மனம் வேதனையில் உறைகின்றது. காரணம்... அந்த கனத்திலே
கூட.. சில பேர், அதிகாரியின் துணை கொண்டு.. கருவறைக்கு அருகிலே... இறைவனை தரிசிக்கின்றனர். இன்னும்
பலபேர் கட்டண தரிசனம் எனும் பெயரில்.. பொறுமையாக இறைவனை காண்கின்றனர். நாங்களோ மனம்
நிலைகொள்ள கூட அவகாசம் இன்றி விரட்டி அடிக்கப்படுகின்றோம். இறைவா இவையாவும் உன் முன்னர்
தானே நடக்கின்றது.... ஏன்... இத்தனை முரன்கள்! ஏன் இந்த அதர்மம்!
என்னைக்கேட்கலாம்...” வேண்டுமானால்
நீயும் பணம் கொடுத்து செல்ல வேண்டியதுதானே என்று. என்னிடமும் பணம் இருக்கின்றது தான்...
நானும் கொடுத்து சுகமாக தரிசனம் செய்யலாம் தான். ஆனால் அப்போதும் கூட... என் அருகிலே
இன்னொரு நபர்... பொது தரிசன பாதையில் விரட்டி அடிக்கப்படுவாறே! அவருக்சகு என்ன பதில்.? கட்டண தரிசன பாதையையும் , சிறப்பு சலுகை பாதைகளையும் பொதுவாக்கினால்
என்ன? அப்போது தானே ஒரு சமநிலை உண்டாகும். அப்போது தானே... நீ அனைவருக்கும் அன்னை.
இரு குழந்தைகளில்.. ஒரு குழந்தைக்கு...பாலும் ஒரு குழந்தைக்கு தண்ணீரும் எந்த அன்னையாவது
கொடுப்பாளா ? நீயும் அப்படித்தானே... !
இந்த அநியாயங்களெல்லாம்... உன் கண் முன்னர் நடக்கின்றதே இறைவா? எப்போது தீரும்...
இந்த அவல நிலை? அன்னைக்கும்.... பிள்ளைக்கும் நடுவே யார் இந்த இடைத்தரகர் கூட்டம்?
200
வை...200 வை என உன் அருளை.. உன் கருணையை கடைச்சரக்காக்கி... உன் முன்னரே ஏலம் விடுகின்றனரே? இந்தத்தரகர்
கூட்டத்தின் கொட்டம் எப்போது மடியும்? கோவில்களில் மட்டுமா நீ இருக்கின்றாய்? கொடி இலையிலும்...
மலர்ந்த மலரிலும்... வீசும் காற்றிலும்.... விரிந்து கிடக்கும் நிலத்திலும்... பறந்து
கிடக்கும் ஆகாயத்திலும்.... கண் எதிரே படும் காட்சிகள் யாவிலும் நீ... இருக்கின்றாராய்...
நீயே இருக்கின்றாய்! ஆனபோதும் என்ன செய்ய... ஒரு அறம் அற்று உன் கோவில்கள் இயங்கின்றனவே? சாதியில் உயர்ந்தேன்
என அவர்களே சொல்லிக்கொண்டு... உன் அங்கம் தீண்டும் உரிமையில் எம்மை துரத்தி அடிக்கின்றனர்.
உன் அருளையெல்லாம்... மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தார் போல... மிரட்டும் வண்ணம்...
காசு கேட்கின்றனர்...
இவை யாவிலும் என்ன இருக்கின்றது தெரியுமா
இறைவா? உன் மீதான பயம். உன் மீதான எங்களின் நம்பிக்கையை...விரட்டி அடித்துவிட்டு...
உன் மீதான பயத்தினை எம்மீது திணித்து.... எங்களை ஏமாற்றுகிறது ஒரு கூட்டம்.
உன்
அருளை யான் பெறவே...
அனுமதிச்சீட்டும் வேண்டுமோ!
என் மனமே நீ அமர
இடைத்தரகரும் வேண்டுமோ?
பேரொளியாய் நீ இருக்க
பெருங்கருணை கொண்டிருக்க
உன் திருஉருவம் கண்டிடவே
காசு பணம் வேண்டுமோ?
ஆலயம் யாவிலும்
அந்தணர் மட்டுமே
உன் அருகே வேண்டுமோ?
உன் மகவே நான் என்றால்
என் உரிமை போனதெங்கே?
பொன் பொருளும் இருக்குமிடம்
சுகமென்றே நீ சென்றால்
என் மனமே ரனமென்று
இருந்திடத்தான் வேண்டுமோ?
எப்போதும் உன் முன்னர்
யாவருமே ஒன்றுதான்...
என்பதெல்லாம் உண்மையென்றால்
அன்பு செய்யும் திரு மனமே
நீ இருக்க வேண்டுமே...!
அதிகார எல்லையெல்லாம்...
அகங்கார சிந்தையெல்லாம்
நீ உடைக்க வேண்டுமே!
எப்போது செய்திடுவாய்
பதில் ஒன்றும் வேண்டுமே!
இப்போதே நீதி வேண்டும்
பதில் ஒன்றும் தந்திடுவாய்...
எதிர்பார்த்தே எழுதுகின்றேன்
இக்கடிதம் நானுமே!
இறைவா...
அனுப்புகிறேன்.....
கடவுளுக்கு ஒரு கடிதம்!
#இளையபாரதி.